"வரலாறு காணாத" பாதுகாப்பு, சிசிடிவி பொருத்தியும் மோதலைத் தடுக்க முடியாமல் கோட்டை விட்ட போலீஸ்
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் கிட்டத்தட்ட 1000 போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டிருந்த நிலையில் வாக்குச் சாவடிக்குள் சிசிடிவி கேமராக்கள் எல்லாம் வைத்தும் கூட இரு தரப்புக்கு இடையே இன்று கடும் மோதல் அரங்கேறி விட்டது.
தேர்தலை நிறுத்த சரத்குமார் தரப்பு முயற்சிப்பதாகவும், இதனால்தான் வேண்டும் என்றே விஷாலைத் தாக்கியும், நடிகை சங்கீதாவை அடித்தும் தாறுமாறாகப் பேசியும் பிரச்சினை செய்வதாகவும் விஷால் தரப்பு புகார் கூறுகிறது.
அதேசமயம், உள்ளே அடிதடி நடக்கவில்லை. இரு தரப்பும் அன்பு மிகுதியால் கத்திக் கொண்டதாக சரத்குமார் தரப்பு கூறுகிறது.
ஆனால் எந்த தனியார் தேர்தலுக்கும் இல்லாத அளவுக்கு பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில் 2 இணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்ற போதிலும் கூட வாக்குச் சாவடிக்குள் நடந்த மோதலைத் தடுக்க முடியாமல் போலீஸார் திணறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோதல் நடந்த இடத்தில் யாரையும் போலீஸாரார் சமாதானப்படுத்த முடியவில்லை என்றும் இரு தரப்பும் போலீஸாரையும் மீறி முறைத்துக் கொண்டிருப்பதாகவும் சம்பவ இடத்தில் இருந்து நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
2 இணை ஆணையர்கள், 8 துணை ஆணையர்கள் தலைமையில் கிட்டத்தட்ட 1000 போலீஸ் பாதுகாப்பு இந்தத் தேர்தலுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மீடியாக்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை. பெரும் வன்முறை நடந்தும் கூட அங்கு செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி தரவில்லை காவல்துறை.
இரு தரப்பையும் சேர்ந்த நடிகர், நடிகையர் வெளியே வந்து கூறும் தகவல்களை வைத்துத்தான் செய்தி தர வேண்டியுள்ளது. இதில் விஷால் தரப்பினர் கூறும் செய்திகளே அதிகம் வெளியாகக் காரணம், அவர்கள் தரப்பைச் சேர்ந்தவர்கள்தான் பதறியபடியும், கத்தியும், கோபப்பட்டும் பேட்டி கொடுக்கின்றனர். சரத்குமார் தரப்பில் பேட்டி அளித்த ராம்கி போன்றோர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறி வருகின்றனர்.
உள்ளே என்ன நடந்தது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.