லத்தியால் அடித்த போலீஸார்... கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைச்சரிடம் பெண் சரமாரி புகார்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓய்வாக அமர்ந்திருந்த போது விசாரணை என்ற பெயரில் போலீசார் லத்தியால் அடித்து துன்புறுத்தியதாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இளம் பெண் புகார் அளித்துள்ளார்.
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துக்கான கணினி முன்பதிவு மையத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 29 கணினி மையம் திறந்து வைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோருக்கும் தனித்தனி கவுண்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது, அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் இது குறித்து விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பெங்களூருவை சேர்ந்த அன்னபூர்ணா என்ற பெண் பயணி ஒருவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போலீசார் சிலர் தம்மை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக கூறினார்.
தலைவலியால் அமர்ந்திருந்த போது லத்தியால் அடிப்பதா? பொது இடத்தில் இப்படித்தான் நடந்து கொள்வதா என்றும் அந்த பெண் கேள்வி எழுப்பினார். ஒரு பெண் தனியாக சுதந்திரமாக பயணிக்க முடியாதா? என்றும் கேட்டார். அதற்கு விஜயபாஸ்கர் நீங்க பெட்டிசன் கொடுத்துட்டீங்க, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிறிது நேரம் தான் ஓய்வாக அமர்ந்திருந்தாகவும், அப்போது போலீசார் தம்மை விடாமல் பேசி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாகவும் கூறினார். தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெண் பயணி, தாம் ஒரு ஆராய்ச்சி மாணவி என்றும், தம்மை துன்புறுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எதுக்கு இங்கே படுத்திருக்கிறீர்கள் என்று கேட்டனர். எனக்கு உடம்பு சரியில்லை என்றேன். அப்போது லத்தியால் அடித்தனர். என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு சந்தேகத்தில் கேட்பதாக கூறினர். நான்கைந்து போலீசார் என்னை துன்புறுத்தும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்யவில்லை என்றார். தனியொரு பெண்ணுக்கு சுதந்திரம் இல்லையா என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கிருந்த சிலர், அந்த பெண்ணை வெளியேற்றுமாறு சைகை செய்தனர். இதனையடுத்து அங்கு வந்த பெண் போலீசார், அந்த பெண்ணை பிடித்து தள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் அந்த பெண் கோபமடைந்தார். இங்கேயும் போலீசார் துன்புறுத்துகின்றனர். என்னை சுதந்திரமாக பேச விடாமல் தடுக்கின்றனர் என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், வழக்கமாக இங்கே தூங்குபவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் எழுப்பி விடுவார்கள். சந்தேகத்தில் விசாரித்திருக்கிறார்கள். மற்றபடி இன்ஸ்பெக்டர் சரவணன் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகிறார் என்று கூறினார். பெண் பயணியின் புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். பொது நிகழ்ச்சியில் போலீஸ் மீது இளம் பெண் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.