மருது சகோதரர்கள் 216வது குரு பூஜை விழா: ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி
மதுரை: மருது சகோதரர்கள் 216வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் நடைபெற்ற விழாவில் போலீசாரின் தடுப்புகளை மீறி சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் 216வது நினைவு தினம், அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் திரு. ஓ. எஸ். மணியன், திரு. ஜி. பாஸ்கரன் ஆகியோர், மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சகோதரர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் போஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மீனாட்சி பஜார் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு, எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. குரு பூஜை விழாவில் பங்கேற்ற சிலர் போலீசாரின் தடுப்புகளை மீறி சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. குரு பூஜை விழாவில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.