விஜயேந்திரருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. சங்கர மடத்தில் போலீஸ் குவிப்பு
விஜயேந்திரருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருவதால் சங்கர மடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
காஞ்சிபுரம்: விஜயேந்திரருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருவதாலும் தமிழ் அமைப்புகள் முற்றுகையிடவுள்ளதாகவும் கிடைத்த தகவலின்பேரில் சங்கர மடத்துக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரனின் தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
அச்சமயம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால் விஜயேந்திரரோ கண்களை மூடிக் கொண்டிருந்தார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றார்.
இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதையடுத்து காஞ்சியில் உள்ள சங்கர மடத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று கூறப்பட்டது.
எனினும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தியானத்தில் இருந்த விஜயேந்திரர் தேசிய கீதத்துக்கு மட்டும் தியானம் களைத்தது எப்படி என்று கேள்வி எழுப்பி ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது விஜயேந்திரரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
இந்நிலையில் காஞ்சியில் உள்ள சங்கர மடத்தை தமிழ் அமைப்புகள் முற்றுகையிட உள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.