வரலாறு காணாதவகையில் அவசரம் அவசரமாக டெங்கு மத்திய குழு தமிழகம் வந்தது ஏன்? பரபர பின்னணி
டெங்கு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்துக்கு மத்திய குழு இவ்வளவு விரைவாக வந்ததன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: வரலாறு காணாத வகையில் அவசரம் அவசரமாக டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்துள்ளது பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெங்கு காய்ச்சல் முன்னெப்போதும் இல்லாத வகையில் விஸ்வரூபமெடுத்துள்ளது. 100-க்கும் அதிகமான உயிர்களையும் காவு கொண்டிருக்கிறது.
சுமார் 12,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான டீம் முழு வீச்சில் டெங்குவைக் கட்டுப்படுத்த இடைவிடாது முயற்சித்து வருகிறது.

தமிழகத்தில் மத்திய குழு
இந்நிலையில் திடீரென டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

தமிழகமும் மத்திய குழுவும்
இதற்கு முன்னர் புயல், மழை, வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட போது மத்திய குழுவை அனுப்புங்கள் என தமிழகம் மன்றாடிப் பார்த்ததுதான் வரலாறு. அப்படியே மன்றாடி போராட்டங்கள் நடத்தினாலும் பல மாதங்கள் கழித்துதான் இந்த குழு தமிழகத்துக்கு வருகை தரும். மேலோட்டமாக ஒரு பார்வையிட்டு அறிக்கை ஒன்று தரும். அந்த அறிக்கையை செயல்படுத்த கோரி மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும்.

மத்திய குழு ஆய்வு
இதுதான் தமிழகம் இதுவரை மத்திய குழு மூலம் பெற்றிருக்கும் அனுபவம். ஆனால் தற்போது திடீரென டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்திருக்கிறது.

அரசியல் தூண்டுதலில் மத்திய குழு
தமிழகத்துக்கு மத்திய குழுவை அனுப்புவதில் ஏதேனும் அரசியல் பின்னணி இருக்கலாமா? என்பது குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏனெனில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் அமைச்சர் விஜயபாஸ்கர். விஜயபாஸ்கர் பெயரை டேமேஜ் செய்துவிட வேண்டும் என்பதற்காக தமிழக அரசியல் தலைவர்களின் தூண்டுதலில்தான் இந்த மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாமோ என்கிற சந்தேகமும் பொதுமக்களால் எழுப்பப்படுகிறது. இருப்பினும் இந்த மத்திய குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications