ஈவ்டீசிங் விவகாரம்: புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.20,000 அபராதம்!
புதுச்சேரி: மாணவிகளை ஈவ்டீசிங் செய்த வழக்கில் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டில் உள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் 6000க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். 90 சதவீதம் பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் புதுச்சேரியில் வந்து தங்கி படிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இரவு புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகளான வித்யா, காவியா ஆகியோர் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சில மாணவர்கள் ஈவ்டீசிங் செய்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் ராகிங் கமிட்டிக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் புகாரின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததுடன், மாணவிகளை ஆறு மாதம் கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்ததுடன், விடுதியை விட்டும் வெளியேற்றியது கல்லூரி நிர்வாகம்.
அதுமட்டுமல்லாமல், ஈவ் டீசிங் செய்ததாக சொல்லப்பட்ட மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படியில் பாதிப்புக்குள்ளான இரண்டு மாணவிகள் மீது வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மாணவிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாணவிகள் இடைநீக்கத்தை மட்டும் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, மாணவிகள் தரப்பில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரனையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ராமசுப்ரமணியம், மாணவிகளின் விவகாரத்தை சரியாக கையாளாத புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், மாணவிகள் விடுதியிலேயே தங்கவும், அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி மீண்டும் செமஸ்டர் தேர்வு எழுத வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்த விசாரணைக் குழுவை ரத்து செய்ததுடன், புதிதாக பல்கலைக்கழக மானியக் குழுவை (யூ.ஜி.சி.) அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications