பொங்கல் முடியும் வரை ஒவ்வொரு இளைஞனும்.. "காளையன்"தான்!
சென்னை: ஜல்லிக்கட்டு ஊரெல்லாம் பேச்சா இருக்கேன்னு ரஜினியோட முரட்டுக்காளைப் படத்தைப் பத்தி விக்கியில போய் தேடினா.. சுந்தர். சி வந்து தனது தெத்துப் பல் "பிரிய" சிரிக்கிறார்... கொஞ்சம் டென்ஷனாத்தான் இருந்தது.. அதை விடுங்க.. முரட்டுக்காளைப் படம் பார்த்திருக்கீங்களா...?
படத்தோட முதல் சீனில் இருந்து கடைசில வணக்கம் போட்டு அனுப்பி வைப்பாங்க பாருங்க.. அது வரைக்கும். பின்னாடி இருந்த ஒரு பயபுள்ள கதையைச் சொல்லச் சொல்லக் கேட்டு கடுப்பாகி ரசிச்ச அனுபவம் நமக்குண்டுங்க.
சக்கை போடு போட்ட படம் அது. தியேட்டர்களில் திருவிழாக் கோலம்தான்.. ரஜினி கட் அவுட் என்ன.. இளையராஜா பாட்டு என்ன.. வான வேடிக்கை என்ன... ஜெய்சங்கர் வில்லனாயிட்டாராமே என்ற சோகம் + ஆச்சரியம் கலந்த பேச்சுக்கள் என்ன.. மறக்க முடியாத திருவிழா போல முரட்டுக்காளை அனுபவம் - அந்தக் காலத்து இளைஞர்களுக்கு.
காளை என்றாலே சிலிர்ப்புதான்.. அதுவும் பொங்கல்தான் கிராமத்து மனிதர்களுக்கு பெரும் விழா.. களை கட்டிய முகத்துடன் சந்தோஷம் தாண்டவமாட வளைய வருவார்கள்.
தீபாவளி உள்ளிட்டவையெல்லாம் டுவென்டி 20 என்றால் பொங்கல்.. பாரம்பரியமான டெஸ்ட் மேட்ச் மாதிரி. நிறுத்தி நிதானமாக ஆடி.. அப்படி வெற்றிக் களிப்போடு முடிக்கும் பாங்கு இருக்கு பாருங்கள்.. மற்ற பண்டிகைகள் எல்லாம் கொஞ்சம் இதற்குப் பிறகுதான்...
மதம் சார்ந்த பண்டிகையாக இல்லாமல் இருப்பது பொங்கல் விழாவின் இன்னொரு சிறப்பு. அத்தனை பேரும் சேர்ந்து கொண்டாடும் சமத்துவப் பொங்கலாக மாறி விட்டது இப்போதைய பொங்கல் பண்டிகை.
காளை மாடு இல்லாத பொங்கல் விழாவை தமிழர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நம்ம ஊரில் என்றில்லை கர்நாடகம், ஆந்திரா பக்கமும் காளைகளுக்கு பொங்கலின்போது (அங்கு சங்கராந்தி) முக்கியத்துவம் உண்டு. அங்கும் கூட மாடு பிடிக்கிறார்கள்.. ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஈடு இணையானது என்று எதையும் சொல்ல முடியாது என்பதே உண்மை.
ஆ.. முரட்டுக்காளையை மறந்துட்டோமே... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குப் பிறகு இந்த முரட்டுக்காளையில் வரும் காளை பிடிக்கும் காட்சிதான் இன்று வரை டக்கென திரைப்பட ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகிறது. அதற்கு முன்பும் கூட பல படங்கள் வந்து விட்டன.. பிறகும் கூட பல படங்கள் வந்து விட்டன.. ஏன்.. விருமாண்டி கூட வந்தாரே.. ஆனாலும் மக்களுக்கு என்னவோ அந்த முரட்டுக்காளைதான் பச்செக்கன மனதில் போய் பதிந்து கிடக்கிறது.
ஊர்த் திருவிழா.. பெரிய மனிதர்களின் உள் குத்துக்கள்... சிரிச்சே குழி பறிக்கும் வில்லத்தனம்... அனல் பறக்கும் சண்டைகள்.. பொறி பறக்கும் வசனங்கள்.. அடித்துத் துவைத்து துவம்சமாக்கி சீவிடுவேன்னு வசனம் பேசிய ரஜினி.. சீறிப் பாய்ந்த முரட்டுக் காளையின் ஆக்ரோஷம், கிராமத்து முரட்டுத்தனத்தையும், வெள்ளந்தித்தனத்தையும் சேர்த்துக் கலக்கிக் கொடுத்த இளையராஜாவின் இசை... எல்லாத்துக்கும் உச்சமாக பொதுவாங்க என் மனசு தங்கம் பாட்டு... இரு அட்டகாசமான கிராமத்து "பேக்கேஜ்" இந்த முரட்டுக்காளை.
கிராமத்து வாழ்க்கையை முழுமையாக நம் முன்பு கொண்டு வந்து காட்டிய படம் முரட்டுக்காளை என்பதால்தான் இன்று வரை பொங்கல் என்றதும் முரட்டுக்காளை கண் முன்பு வந்து நிற்கிறது... மகாநதி போன்றவை இடை இடையே வந்து போனாலும்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்து விட்டது.. சீறிப் பாயக் காத்திருக்கு ஒவ்வொரு இளைஞனும் பொங்கல் முடியும் வரை "காளையன்"தான்... மனதளவில்!