அதிமுகவில் பின் தள்ளப்படும் ஓ.பி.எஸ்.. முன்னேறும் பொன்னையன்: பரபர பின்னணி
சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் மட்டுமே அடிமட்டத்தில் இருப்பவர்கள் உச்சிக்கு செல்வதும், உயர் பதவியில் இருப்பவர்களின் ப்யூஸ் பிடுங்கப்படுவதும் அடிக்கடி நடக்கும், இப்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதிமுகவில் நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மூத்த தலைவர் பொன்னையன் மீண்டும் முன்னணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அதே நேரத்தில் கட்சியின் புரோட்டாக்கால் லிஸ்ட்படி மூன்றாவது இடத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று கட்சித் தலைமைக்கு மட்டுமே தெரியும்.
அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது இதில், அதிமுக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா 7வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் வட்டம், பகுதி, நகரம், மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தொடர்ந்து,நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், மாநில நிர்வாகிகள் பட்டியலை ஜெயலலிதா சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
அதன்படி அதிமுக அவைத் தலைவராக மதுசூதன், அமைப்பு செயலாளராக பொன்னையன், பொருளாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,
ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலைய செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராக பழனியப்பன்,
அமைப்பு செயலாளர்களாக விசாலாட்சி நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், செம்மலை, எஸ்.ராஜூ, எம்எல்ஏ பாப்பாசுந்தரம், எம்பிக்கள் கோபால், வளர்மதி, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி ஆகியோரும்,
அமைப்பு செயலாளர் மற்றும் மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்களாக அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, ஏ.கே.செல்வராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுதவிர பல்வேறு அணி நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சீனியர்களுக்கு முக்கியத்துவம்
கடந்த சில வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு மீண்டும் அமைப்பு செயலாளர் பதவி
வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிமுகவில் நம்பர் 2 இடத்தில் அவைத்தலைவராக இருந்தவர் பொன்னையன்.
கடந்த2006ம் ஆண்டு அவைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டு அது மாஜி சபாநாயகர் காளிமுத்துவிற்கு அளிக்கப்பட்டது. அதிலிருந்தே கட்சியை விட்டு ஒதுங்கியே இருந்தார். தற்போது மீண்டும் பொன்னையனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
புதியவர்கள் யார்? யார்?
இதேபோல் அமைப்புச் செயலாளர்கள் நாமக்கல் ராஜு, குளித்தலை எம்எல்ஏ பாப்பாசுந்தரம், நாகை எம்பி கோபால், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ வளர்மதி, தூத்துக்குடி எம்பி ஜெயசிங் ஆகியோர் புதியவர்கள். மேலும் திருமயம் எம்எல்ஏ வைரமுத்துவுக்கு விவசாய பிரிவு செயலாளர் பதவி
வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பொறுப்பில் அண்மையில் இறந்த தங்கமுத்து இருந்தார்.
கரூர் பாப்பா சுந்தரம்
போக்குவரத்து துறை அமைச்சராகவும், கட்சியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராகவும் கருதப்பட்ட செந்தில்பாலாஜி கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அந்த மாவட்டத்தில் யாருக்கும் அமைச்சர் பதவியோ, கட்சியின் முக்கிய பொறுப்போ கொடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து இந்த மாவட்டத்தை சேர்ந்த மூத்த எம்எல்ஏவான பாப்பாசுந்தரத்துக்கு தற்போது அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் புண்ணியத்தில் பதவி
அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திட்டிய புண்ணியத்தில் ஸ்ரீரங்கம் வளர்மதிக்கும், திருமயம் எம்.எல்.ஏ வைரமுத்துவிற்கும் பதவி கிடைத்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராகவும், புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் உள்ள விஜயபாஸ்கர், பெரும்பாலான நலத்திட்டங்களை தனது தொகுதியான விராலிமலைக்கே கொண்டு செல்வதாக உள்ளூர் அதிமுக நிர்வாகிகளிடையே மனப்புழுக்கம் இருந்து வந்தது. இதையடுத்து கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரும், திருமயம் எம்எல்ஏவுமான வைரமுத்துக்கு தற்போது விவசாய பிரிவு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பதவி பெற்ற எம்.பிக்கள்
அமைச்சர் காமராஜின் பரிந்துரையின்பேரில் நாகை எம்பி கோபாலுக்கும் அமைப்பு செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இதேபோல தூத்துக்குடி எம்.பி-யான ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி ஆகியோருக்கும் புதிதாக பதவி கிடைத்துள்ளது.
ஓ.பி எஸ்க்கு இறக்கம்
கட்சியின் புரோட்டோகால் லிஸ்ட்படி பொதுச் செயலாளர், அவைத் தலைவருக்கு அடுத்த இடத்தில் பொருளாளர் இருப்பார். ஆனால் 3வது இடத்தில் இதுவரை இருந்த பன்னீர்செல்வம் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஓ.பி.எஸ் குடும்பத்தினர் செயல்பாடுகள் சமீபகாலமாகவே சரியில்லை. ஒரு பக்கம் காண்ட்ராக்ட்கள்- சம்பாத்தியம் இன்னொரு பக்கம் பூசாரி தற்கொலை விவகாரம், சமீபத்தில் திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின் போது ஓ.பி.எஸ் தம்பி ராஜா, போலீஸ் டி.எஸ்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என இக் குடும்பத்தின் செயல்பாடுகள் தலைமையின் கோபத்தை அதிகப்படுத்திவிட்டதாம்.
கல்தா கொடுக்கப்பட்ட பி.ஹெச்.பாண்டியன்...
கட்சிப்பதவியில் இருந்து பி.ஹெச்.பாண்டியனும், ஆதிராஜாராமும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதிமுக தேர்தல் பிரிவு செயலாளராக சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன் இருந்தார். தற்போது அவரிடம் இருந்து தேர்தல் பிரிவு செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவரான உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளது.
கட்சிப்பதவியோ அமைச்சர் பதவியோ அதிமுகவில் எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை.