திடீர் பழுது... கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் உள்ள குழாய் ஒன்றில் திடீர் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், நிர்மானப் பணிகள் முடிந்த நிலையில் முதல் அணு உலையில் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது. பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூன் 25-ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஏழு மாதங்களுக்கு பிறகு பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, எரிபொருள் நிரப்பப்பட்டு, கடந்த ஜனவரி 30ம் தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து பிப்ரவரி 4-ம் தேதி 816 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை நீராவி குழாயில் பழுது ஏற்பட்டது. அன்று இரவு முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்று வந்தன.
மராமத்து பணிகள் முடிவடைந்து, 14-ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் முதல் அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. அன்றைய தினம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில், திடீரென குழாய் ஒன்றில் பழுது ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரஷ்ய மற்றும் இந்திய விஞ்ஞானிகள் முதல் அணுஉலைப் பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.