ரயில் பாதையில் மின்தடை… சென்னைக்கு 3 மணிநேரம் தாமதமாக வந்த தென்மாவட்ட ரயில்கள்
சென்னை: கிண்டி-கோடம்பாக்கம் இடையே ரயில் பாதையில் மின் வயர் அறுந்து விழுந்து மின் வினியோகம் தடைப்பட்ட காரணத்தால் காலை 5.15 மணியளவில் இருந்து தென் மாவட்டத்தில் இருந்து வந்த ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. மின்பாதை சீர் செய்யப்பட்ட உடன் பாண்டியன், மன்னார்குடி, பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்கள் மூன்று மணிநேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4.15 மணியில் இருந்து வெளியூர்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரத் தொடங்கும். இன்று முதலில் சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலும் அதனைத் தொடர்ந்து உழவன் மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூருக்கு வந்து சேர்ந்தன. அதன் பின்னால் அடுத்தடுத்து வரக்கூடிய ரயில்கள் வந்து கொண்டிருந்த போது மின்பதையில் வயர் அறுந்தது.
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் வந்த கொண்டிருந்த போது கிண்டி-கோடம்பாக்கத்திற்கு இடையே மின்பாதையில் மின் வினியோகம் தடைப்பட்டது. காலை 5.15 மணியளவில் அந்த பகுதியில் மின் வயர் அறுந்ததால் தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே வழியில் நின்றன.
பாண்டியன், மன்னார்குடி, பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்கள் கிண்டியில் நிறுத்தப்பட்டன. இதனால் எழும்பூர் நிலையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில்கள் வரமுடியாமல் போயின.
எழும்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு செல்லக்கூடிய ரயில்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கடையில் மின் பாதையில் ஏற்பட்ட பாதிப்பினை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 7 மணி அளவில்தான் மின் வயர் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு எழும்பூர் நிலையத்திற்குள் வந்தது. இதனால் 3 மணி நேரம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்கம்பி அறுந்ததால் நிறுத்தப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் 2.20 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்தது. பாண்டியன் 45 நிமிடமும், சிலம்பு எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஒரு மணிநேரமும், கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தன.
திங்கட்கிழமை தினமான இன்று வெளியூரில் இருந்து வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். ஒரு சிலர் வழியிலேயே இறங்கி ஆட்டோவில் வீடுகளுக்கு சென்றனர். தாமதமாக வந்த ரயில்களால் எழும்பூர் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
மேலும் எழும்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு செல்லக்கூடிய புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்பட்டு சென்றன. காலை 9.30 மணிக்கு பிறகு தான் போக்குவரத்து சீரானது.