ஹைட்ரோகார்பன் திட்டத்தை குஜராத்தில் செயல்படுத்துங்கள்... நெடுவாசல் போராட்டக்காரர்கள் ஆவேசம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீர வேண்டும் என்றால் சொந்த மாநிலமான குஜராத்தில் செயல்படுத்திக் கொள்ளுங்கள் என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்து கோஷமிட்டனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தங்கள் சொந்த மாநிலமான குஜராத்திலும், தமிழக முதல்வர் கே.பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியிலும் செயல்படுத்திக் கொள்ளட்டும் என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கடந்த 14 நாள்களாகவும், கோட்டைக்காட்டில் 4 நாள்களாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று முதல்வர் அறிவித்துள்ளபோதிலும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று நெடுவாசல் மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீர வேண்டும் என்றால், மோடி அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்திலோ அல்லது தமிழக முதல்வர் கே.பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியிலோ செயல்படுத்திக் கொள்ளட்டும்.
நெற்களஞ்சியமான எங்கள் மண்ணில் மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம். ஒரு பிடி மண்ணையும் அல்ல அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் சட்டத்தை கையில் எடுக்கவும் தயாராக உள்ளோம். இந்தப் போராட்டத்தை மேலும் தீவிரபடுத்துவோம்.
வாடிவாசல் திறக்கும் வரை வீடுவாசல் செல்லமாட்டோம் என்று ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் போராடியதை போல ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தோண்டப்பட்ட அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூடும் வரை நெடுவாசல் மக்களாகிய நாங்கள் வீடு வாசல் செல்ல மாட்டோம். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து வந்தார். என்னவாயிற்று? போராட்டத்தில் தானே வெற்றி கிடைத்தது. எனவே நாங்கள் வெற்றி பெறும் வரை போராடுவோம் என்றனர்.