65 ஆதரவற்ற குழந்தைகளை வெளியேற்றிய காப்பகம்- மதுரையில் பரபரப்பு
ஆதரவற்ற 65 பெண்குழந்தைகளுக்கு தங்கி படிக்க இடமில்லை வெளியே விரட்டிய நிர்வாகத்தைக் கண்டித்து மதுரையில் போராட்டம் வெடித்துள்ளது.
மதுரை: மதுரையில் இயங்கிவரும் காப்பாகத்தில் இரண்டாவது நாளாக ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயில அனுமதி மறுத்ததால் குழந்தைகள் உறவினர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை கே.கே.நகர் பகுதியில் சமூகபாதுகாப்புத்துறை சார்பில் செயல்படும் சத்தியா அம்மையார் நினைவு ஆதவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கடந்தாண்டு 112 பெண் குழந்தைகள் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில், இந்தாண்டு கட்டமைப்பு குறைபாடு காரணம் காட்டி 35 குழந்தைகளை மட்டும் தங்க அனுமதி அளித்து , 65 பெண் குழந்தைகள் தங்கி படிக்க காப்பக நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதனால் வெளியேற்றப்பட்ட குழந்தைகள் தங்களின் உறவினர்களோடு காப்பகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . பள்ளிகள் திறந்து 2 நாட்களாகியும் கல்வி கற்க முடியாமல் மாணவிகள் காத்திருப்பது வேதனைக்குரியது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.