சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி- கோல்வால்கர் படம் எரிப்பு
பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ம.க.இ.க அமைப்பினர் போலீஸாரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் கலை இலக்கிய கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இப்போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கோல்வால்கர் உருவபடம் எரிக்கப்பட்டது.
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் விரைவில் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையேயும், மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தனது பதிவை எச்.ராஜா நீக்கிவிட்ட போதிலும், தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று போராட்டம் நடந்து வரும் நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர தொழிலாளர் முண்ணனி, புரட்சிகர இளைஞர் மாணவர் முண்ணனி சார்பில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
இளைஞர்கள், தொழிலாளர்கள்,மாணவர்கள் மற்றும் கைக்குழந்தைகளோடு பெண்கள் பாஜக, எச்,ராஜாவிற்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிராகவும் கோஷமிட்டதை அடுத்து, அங்கு இருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கோல்வால்கர் மற்றும் எச்.ராஜாவின் புகைப்படங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications