விவசாயிகள் ஆதரவு போராட்டத்தால் ஸ்தம்பித்த போக்குவரத்து.. மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவான இயக்குநர் கவுதமன் தலைமையிலான போராட்டத்தால், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
திடீரென நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை போலீசார், உளவுத்துறை என யாருமே கணிக்கவில்லை. போராட்டம் நடத்த தேர்ந்தெடுத்த இடம் முக்கியமான பகுதி என்பதால் அதன் தாக்கம் சென்னை நகரின் பல பகுதிகளிலும் எதிரொலித்தது.
இதனால்தான் காலை சுமார் 9.30 மணி முதல் சென்னை நகரம் முழுக்க முடங்கிப்போனது போல காட்சியளித்தது.
ஏர்போர்ட் சாலை
சென்னை கிண்டி, விமானநிலையம், வடபழனி சாலைகள் அனைத்தும் முடங்கிப்போயின. ஏர்போர்ட்டிலிருந்து விஐபிகள் சென்னைக்குள் வரும் பகுதி இது என்பதால் அவர்களும் தங்கள் அதிருப்தியை மேலிடத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
நுழைவாயில்
சென்னையில் நுழைவாயில் போன்ற பகுதி கிண்டி. ஆனால் இதன் வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியவில்லை, அதேபோல சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியவில்லை என்ற சூழல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது.
ஆபீஸ் செல்வோர்
இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்படைந்தனர். பூந்தமல்லி சாலை, அண்ணா சாலை வரை போக்குவரத்து பாதிப்பு தெரிந்தது. இதனால் அலுவலகம் செல்வோர் கடும் வெயிலில் கஷ்டப்பட்டனர்.
மெல்ல, மெல்ல இயல்புநிலை
விவசாயிகள் ஆதரவு போராட்டக்காரர்கள் கிண்டி மேம்பாலத்தில் போட்ட சங்கிலி, பூட்டை போலீசார் உடைத்து, கவுதமன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் சென்ற பிறகு, மெல்லமெல்ல போக்குவரத்து சீரடைந்தது. இதன்பிறகே நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.