பாம்பன் கடலில் கலாமுக்கு பிரமாண்ட சிலை... வாட்ஸ் அப்பில் வலம் வரும் கோரிக்கை
சென்னை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பாம்பன் கடலில் பிரமாண்ட சிலை வைக்க வேண்டும் என சமூகவலைதளங்கள் வாயிலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த 27ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மரணத்தால் இந்தியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
2020ல் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என கனவு கண்ட தங்கள் தலைவன், அதனைக் காணாமல் சென்று விட்டாரே என்ற ஏக்கம் இந்திய மக்களிடையே உள்ளது.
|
கலாம் காட்டிய வழியில்...
ஆனபோதும், கலாமின் கனவை நினைவாக்கும் முயற்சியில் தொடர்ந்து இயங்கப் போவதாக இளைய சமுதாயம் சபதம் செய்துள்ளது என்றே கூறலாம். வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கலாம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்களே இதற்கு உதாரணம்.
பாம்பன் கடலில் சிலை...
இந்நிலையில், கன்னியாகுமரியில் உலகமே வியக்கும் வகையில் திருவள்ளுவருக்கு வைக்கப் பட்டுள்ள 133 அடி உயர சிலை போல, கலாமிற்கும் பாம்பன் கடலில் பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாதிரிப் படம்...
இது தொடர்பாக உருவாக்கப் பட்ட மாதிரிப் படம் ஒன்றும் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரூபாய் நோட்டில்...
மேலும், ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி புகைப்படம் இடம் பெற்றிருப்பது போல, கலாம் படமும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் சிலர் முன் வைத்துள்ளனர்.
குழந்தைகளின் கனவுகள்...
இன்னும் சிலரோ, கலாம் அதிகம் விரும்பிய குழந்தைகளின் கனவுகளுக்கு பெற்றோர்கள் மதிப்பளிப்பதே அவருக்கு நாம் தரும் உண்மையான அஞ்சலி எனத் தெரிவித்துள்ளனர்.
Posted by Nagaraja Bela onWednesday, July 29, 2015 |
குழந்தைகள் தினமாக...
இன்னும் சிலர் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவதற்குப் பதில் கலாமின் பிறந்த நாளைத்தான் குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
|
விதைக்கப்பட்ட புண்ணியம்...
இதேபோல், 'பாவங்களை கரைக்கும் ராமேஸ்வரத்தில் ஒரு புண்ணியம் விதைக்கப் பட்டுள்ளது' என கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்த கவிதை ஒன்றும் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.