புண்ணாக்கு கடைன்னு சொல்லி டாஸ்மாக் திறந்த பலே அதிகாரிகள்... தாலியை கழற்றி போராடிய பெண்கள்
பல்லடம் அருகே புண்ணாக்கு கடை என்று கூறி அதிகாரிகள் டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : பருத்திக்கொட்டை மற்றும் புண்ணாக்கு கடை அமைப்பதாகக் கூறி விட்டு டாஸ்மாக் கடை அமைத்த அதிகாரிகளைக் கண்டித்து பல்லடம் அருகே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி அதிகாரிகளிடம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அவரப்பாளையம் பகுதியில் நேற்று புதிதாக "டாஸ்மாக்' கடை ஒன்று திறக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பூர் நகருக்கு சென்றுவிட்டு இரவு பத்து மணிவரை பெண்கள் இங்கே வந்து போய் கொண்டிருக்கின்றனர். 20 கிராமப் பகுதி மக்கள் பயன்படுத்தும் பிரதான வழியில் மதுக்கடை திறந்துள்ளதால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியரிடம் மனு
சாலையோரம், விவசாய நிலத்தில் மதுக்கடை அமைத்துள்ளது சட்டத்தை மீறும் செயல் என்றும். இப்பகுதியில் மதுக்கடை வேண்டாம் என, ஏற்கனவே போராட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
ஏமாற்றிய அதிகாரிகள்
இந்த கடையை சில வெளியூர் ஆட்கள் வந்து பார்த்துவிட்டு சென்றதை அறிந்து அதிகாரிகளிடம் விசாரித்த போது இந்த இடத்தில் பருத்திக்கொட்டை மற்றும் புண்ணாக்கு கடை அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது இதை டாஸ்மாக்காக மாற்றியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக கிராம வாசிகள் குற்றஞ்சாட்டினர்.
பெண்கள் ஆவேசம்
பொதுமக்களின் போராட்டம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டாஸ்மாக் அதிகாரிகளை நிகழ்விடத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர். ஆனால் டாஸ்மாக் அதிகாரிகள் வரத் தாமதமானதால் மதுக்கடையை மூடாமல் செல்ல மாட்டோம் என்று பெண்கள் ஆவேசமடைந்தனர்.
மஞ்சள் கயிறை வீசி போராட்டம்
எங்களுக்கு தாலிக்கு தங்கம் தேவையில்லை; தாலி எங்களது கழுத்தில் நிரந்தரமாக இருக்க வழி செய்யுங்கள் என்று கூறிய பெண்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மஞ்சள் கயிறுகளை, கழுத்தில் இருந்து கழற்றி ரோட்டில் வீசி எறிந்து அரசுக்கும், மதுவுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.
கைவிரிப்பு, தொடர் போராட்டம்
நீண்ட நேரத்திற்குப் பின்னர் போராட்ட இடத்திற்கு வந்த டாஸ்மாக் மேலாளர் சட்ட விதிகளின்படியே டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மடும் அதிகாரம் ஆட்சியருக்கே உண்டு என்றும் கூறினார். இதனையடுத்து எந்த அதிகாரியையும் நாங்கள் சந்திக்க மாட்டோம், அவர்கள் எங்களை சந்திக்கட்டும் அதுவரை டாஸ்மாக்கை திறக்க முடியாது என்று கூறி பெண்களும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.