சிறையில் சசிக்கு சிறப்பு வசதி.. கிளப்பி விட்டது யார் தெரியுமா?: திண்டுக்கல் சீனிவாசன் சீற்றம்
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளியான தகவல் விளம்பர பிரியர்கள் சிலர் கிளப்பிட்ட பிரச்சனை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவுக்கு பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், விளம்பரப் பிரியர்கள் சிலர் இந்த பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளதாக கூறினார். மேலும், உயர்மட்டக்குழு விசாரணைக்குப் பிறகு உண்மைகள் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு சமையலறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தார் என சிறை டிஐஜி ரூபா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.