வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம்... புதுச்சேரியில் ரயிலை மறித்த சட்டக்கல்லூரி மாணவர்கள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி : காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உச்சநீதிமன்றம் அறிவித்த காலக்கெடுவான மார்ச் 29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் வெடித்துள்ளன. திமுகவினர் தோழமைக் கட்சிகளுடன் 4வது நாளாக சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய சங்கத்தினரும் விமான நிலையம் முற்றுகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை என்று மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ரயில் நிலையத்திற்கு மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிலர் இன்று காலையில் வந்தனர்.
புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லக்கூடிய பயணிகள் ரயிலை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் எஞ்சினின் மீது ஏறி நின்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களை போலீசார் சமாதானம் செய்து கீழே இறங்கச் செய்தனர்.
தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கொடு கர்நாடகமே, உச்சநீதிமன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு மத்திய அரசே என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குரல் எழுப்பினர். மாணவர்களை போலீசார் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்திய நிலையில் ரயில் நிலைய நடைமேடையில் நின்றபடியே மாணவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications