தமிழகம், புதுவை உள்ளிட்ட 7 மாநிலங்களில் தேர்தல் செலவு அதிகம்: தேர்தல் ஆணையம்
புதுவை: தமிழகம், புதுவை உள்ளிட்ட 7 மாநிலங்களில் தேர்தல் செலவு அதிகம் என்று தேர்தல் ஆணையம் கணக்கிட்டுள்ளதாக புதுவை தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
புதுவை தேர்தல் துறை சார்பில் ஊடகத்துறையினருக்கான பயிலரங்கம் அன்னை தெரசா முதுநிலை பட்டமேற்படிப்பு நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
தமிழகம், புதுவை உள்ளிட்ட 7 மாநிலங்கள் தேர்தல் நேரத்தில் அதிகம் செலவு செய்யும் மாநிலங்கள் ஆகும். மத்திய தேர்தல் ஆணையம் விரைவில் மக்களவை தேர்தல் தேதியை அறிவிக்கவிருக்கிறது. தேர்தல் குறித்து கடந்த 4ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டமும், 20ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.
வரும் தேர்தலை 100 சதவீதம் நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. தேர்தல் செலவு பார்வையாளர்கள் வேட்பாளர்களின் செலவுக் கணக்கை தினமும் கண்காணிப்பார்கள். மேலும் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர், காவல்துறை ஒருங்கிணைப்பு அலுவலர் ஆகியோர் பண நடமாட்டத்தை கண்காணிப்பார்கள். இது தவிர மதுபான நடமாட்டமும் கண்காணிக்கப்படவிருக்கிறது. இதற்கென்று தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது பற்றி அறிவிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் புதிய விதிகளை வகுத்துள்ளது. அரசியல் சட்டத்திற்குட்பட்டு வாக்குறுதிகள் அளிக்க வேண்டும். இலவசங்கள் வழங்கினால் அவை எதற்காக வழங்கப்படுகின்றன, அவற்றுக்கான நிதி ஆதாரம் பற்றி கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications