அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்கவேண்டும்.. அஸ்வினியின் தாயார் கதறல்
அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என அஸ்வினியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என அஸ்வினியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் ஆலபாக்கம் தனலட்சுமிநகரை சேர்ந்த சங்கரி தம்பதியின் மகள் அஸ்வினி. இவர் கே.கே நகரில் உள்ள மீனாட்சி கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தந்தை மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது தனது தாய் சங்கரியுடன் அஸ்வினி வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே அழகேசன் என்ற 24 வயது இளைஞர் வசித்து வந்தார்.
தண்ணீர்கேன் சப்ளை
இவர் சென்னை மாநகராட்சி 143வது வார்டில் சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும் வீடு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார். அஸ்வினியின் வீட்டிற்கும் அழகேசன் தான் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார்.
உயிருக்கு உயிராக காதல்
அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதற்கு அஸ்வினியின் தாயார் சங்கரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அஸ்வினியை ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைத்துள்ளார்.
கொலை செய்த அழகேசன்
இதைத்தொடர்ந்து அஸ்வினி அழகேசனின் காதலை முறித்துள்ளார். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் கல்லூரியில் இருந்து வெளியே வந்த அஸ்வினியை, கல்லூரிக்கு வெளியே காத்திருந்த அழகேசன் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
காவல்துறை பதிலளிக்கவேண்டும்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரவாயல் காவல்துறையினர் அஸ்வினி கொலை குறித்து பதிலளிக்க வேண்டும் என அஸ்வினியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் வரவேண்டும்
அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியும் பாதுகாப்பு அளிக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அழகேசனின் உறவினர்கள் இங்கு வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தண்டனை வழங்க வேண்டும்
அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்கவேண்டும் என்றும் இல்லையேல் அஸ்வினி உடலை வாங்க மாட்டோம் என்றும் அஸ்வினியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.