எம்.ஜி.ஆருக்கு தந்த 'பிராமிஸ்'.. சோழிங்கநல்லூரில் களமிறங்கும் சீக்கிய ஐஏஎஸ் அதிகாரி!
சென்னை: பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரது பெயர் உஜாகர் சிங்.
பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரிலிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கியாலி என்ற ஊரைச் சேர்ந்தவர் உஜாகர் சிங். இவர் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியிலிருந்து பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வட இந்தியர் ஒருவர் தமிழகத் தேரத்லில் போட்டியிடுவது என்பது அரிதிலும் வெகு அரிதானதாகும். இவர் அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைச் சேர்ந்தவராம்.
1977 பாட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் தமிழக கேடரில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடைசியாக அரசு டேட்டா சென்டரில் 2010ம் ஆண்டு சிறப்பு ஆணையராக இருந்து ஓய்வு பெற்றார்.
தான் போட்டியிடுவது குறித்து உஜாகர் சிங் கூறுகையில், ‘எனது கட்சியின் நலத் திட்டங்களான இலவசக் கல்வி என்னைக் கவர்ந்தது. அதனால்தான் நான் கட்சியில் இணைந்தேன். மேலும் கட்சித் தலைவர் தேவநாதனும் என்னை கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தார். அவர் ஒரு நல்ல தலைவர்' என்கிறார்.
தமிழகத்திலேய தொடர்ந்து தங்கியது ஏன் என்ற கேள்விக்கு தமிழர்கள் அன்பானவர்கள், இரக்க குணம் மிகுந்தவர்கள். அருமையானவர்கள், பெருந்தன்மையானவர்கள். பொறாமை இல்லாதவர்கள், ஈகோ பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்களை நாட்டில் எங்குமே பார்க்க முடியாது. இதனால்தான் நான் தமிழகத்திலேயே தொடரந்து தங்கி விட்டேன் எனக் கூறுகிறார் உஜாகர்.
அதை விட அடுத்து தமிழகத்திலேயே தங்கி இருப்பதற்கு அவர் கூறும் காரணம்தான் மிக முக்கியமானது. அதாவது, "மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடன் நான் பழகியுள்ளேன். அவரிடம் நான் ஒரு வாக்குறுதி கொடுத்தேன். என்னைப் போன்ற அதிகாரிகள் ஓய்வுக்குப் பிறகு தமிழகத்திலேயே தங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் கூறுவார். அதை நான் இப்போது நிறைவேற்றுகிறேன்" என உஜாகர் தெரிவித்துள்ளார்.