சென்னையில் ஒன்று திரண்ட பொதுப்பணித்துறை பொறியாளர்கள்.. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
Recommended Video
சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கங்கள் அனைத்தும் ஒரே குடையில் ஒன்று திரண்டு இன்று சென்னையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இந்த போராட்டம் நடைபெற்றது. அரசுத் துறைகள், வாரியங்கள், போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிடும் பொறியாளர்கள் அனைவரும் தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரே அணியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரிப் பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு ஊதிய விகிதங்கள் அமலாகாமல் இருப்பது, வாரியங்களில் பணியாற்றும் பட்டதாரிப் பொறியாளர்களுக்கு ஆறாவது ஊதியக் குழு அமலாக்கத்தினைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் ஏழாண்டுகளாகியும் அமலாகாமல் இருப்பது, காலமுறை பதவி உயர்வு இன்னும் நிறைவேறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இன்றைய போராட்டத்தில் பெரும் திரளான பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய பொறியாளர் கூட்டமைப்பு நிர்வாகிகளும், தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பின் முன்னாள் இன்னாள் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர்.
பொதுப்பணித்துறை மட்டுமல்லாமல் பல்துறைகளைச் சேர்ந்த பொறியாளர்கள் சுமார் 5000 பேர் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு ஒரு நபர் ராஜீவ் ரஞ்சன் கமிட்டி குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 15,600 வழங்க பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் 2010ல் முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வந்தது. ஆனால் பொறியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 15,300 ஆக குறைக்கப்பட்டது. இது பொறியாளர்களிடையே எதிர்ப்பை கிளப்பியது.
இதைத் தொடர்ந்து 2012ல் கிருஷ்ணன் தலைமையில் ஊதியக் கமிட்டி அமைக்கப்பட்டது. இது குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 9300 ஆக குறைத்து விட்டது. இதை எதிர்த்து பொறியாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட், அந்தப் பரிந்துரையை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு 2013ல் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்குப் போனது. அது தற்போது நிலுவையில் உள்ளது.
இதைக் காரணம் காட்டி 7வது ஊதியக் குழு பரிந்துரையை தமிழக அரசு அமலாக்காமல் உள்ளது. இதுதான் பொறியாளர்களின் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்த தாமதத்தைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பொறியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.