சென்னையில் 9 பெண் டிடிஆர்கள் சஸ்பெண்ட்: அதிகாரி துப்பாக்கியை காட்டி மிரட்டினாரா?
சென்னை: சென்னையில் ரயில்வே முதுநிலை வர்த்தகப்பிரிவு மேலாளர் அஜித் சக்சேனா அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, பெண் டிக்கெட் பரிசோதகர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தெற்கு ரயில்வே அதிகாரியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளராக இருப்பவர் அஜித் சக்சேனா. செவ்வாய்கிழமையன்று இவரை சந்திக்க, தெற்கு ரயில்வேயில், டிக்கெட் பரிசோதகர், டிக்கெட் முன்பதிவு மையங்களில் பணி புரியும், ஒன்பது பெண் ஊழியர்கள் சென்றனர்.
சிறிது நேரம் காத்திருக்க நேரிட்டதால், அவரது அறைக்குள் சென்று, தங்களின் பணியிட மாறுதல் தொடர்பாக கேட்டனர். அப்போது, மற்றொரு நபருடன் அஜித் சக்சேனா பேசிக் கொண்டு இருந்தார். அதை இடை மறித்து, பெண் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை கூறினர்.
ஒரு கட்டத்தில், அதிகாரி அஜித் சக்சேனா, பெண் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, பெண் ஊழியர்கள் மீது, சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அறையில் இருந்து வெளியேற்றினர். தலைமை வர்த்தக மேலாளர் அறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட பெண் டிக்கெட் பரிசோதகர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்.ஆர்.எம். தொழிற்சங்கத்தை சேர்ந்த சுசீத்ரா பாணி தலைமையில் அத்துமீறி நுழைந்து தகராறு செய்த 9 பெண் டிக்கெட் பரிசோதகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
சுசித்ரா பாணி, யோக சித்ரா, ரோஸ்மேரி, நிரூபாமா, மஞ்சு, நவநீதம், சகுந்தலா, அனிதா, ஆனிரெஜினா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டிக்கெட் பரிசோதகர்கள் ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வருவதால் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், ரயில் எமர்ஜென்சி ஒதுக்கீடு அவரவர் தான் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில அதிரடி மாற்றங்களை சக்சேனா செய்துள்ளார். இதற்கு பெண் டிக்கெட் பரிசோதகர்கள் எதிர்ப்பு தெரிவித்து தான் பிரச்சினையை கிளப்பி வருவதாக ரயில்வே அதிகாரி தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிக்கெட் பரிசோதகர்களாக பணியாற்றும் பெண்கள், பெண்களை தென்னக ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் அஜீத்குமார் சக்சேனாவை சந்தித்த போது தரக்குறைவாக பேசியதுடன், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக, ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அஜீத்குமார் சக்சேனாவின் இந்த செயலை கண்டித்து, தென்னக ரயில்வேக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எஸ்.ஆர்.எம்.யு. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அஜீத்குமார் சக்சேனா மீது ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள்.
சென்னை சென்ட்ரல் கோட்ட அலுவலகம், பெரம்பூர் கேரேஜ், பெரம்பூர் லோகோ பணிமனை ஆகிய இடங்களில், நேற்று, 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரி அஜித் சக்சேனா, தங்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக, பெண் ஊழியர்கள் கூறினர். அதைத் தொடர்ந்து தான் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
தற்போதுள்ள முதன்மை வர்த்தக மேலாளர், பணியாளர்களை சரியாக வேலை வாங்க கூடியவர். டிக்கெட் பரிசோதிக்கும் பணியில், மாத இலக்கை முடித்து விட்டு, பணி செய்யாமல் இருந்து விட முடியாது. தினமும் பணி செய்ய வேண்டும் என, அனைத்தையும் முறைப்படுத்தி வருகிறார். அவரது முறையான நடவடிக்கை பிடிக்காமல், பலர் அவருக்கு எதிராக செயல்படுகின்றனர். துப்பாக்கி காட்டி மிரட்டினார் என்பது பொய் தகவல் என்று சிலர் கூறியுள்ளனர். இதில் யார் சொல்வது உண்மையோ? விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும்.