ரஜினி சார்.. வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருந்தால் நல்லது!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து மக்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கொண்டே போகிறார். யாருக்காக நாம் என்பதை இன்னும் கூட அவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. இன்று கூட தூத்துக்குடியில் மீண்டும் மக்களின் போராட்டத்தை குறைத்துப் பேசியிருக்கிறார்.
இன்னும் எத்தனை காலம்தான் மக்கள் குறித்த புரிதல் ரஜினிக்கு ஏற்படும் என்பது தெரியவில்லை. ரஜினியை நினைத்தாலே நமக்குத்தான் ஒரு நிமிடம் தலையைச் சுற்றுகிறது. அப்படிக் குழப்பித் தள்ளுகிறார் தலைவர்!
எதைப் பேசுவது, எந்த இடத்தில் எப்படிப் பேசுவது என்பதில் பெரும் தவறுகளை தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் தெரிந்துதான் பேசுகிறாரா இல்லை தெரியாமல் பேசுகிறாரா என்பதும் புரியவில்லை.
போராடும் மக்களை குறை சொல்வதா
மக்கள் போராட்டங்களை அவர் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டே வருகிறார். போராடாதீங்க என்கிறார். ஏன் அப்படிச் சொல்கிறார் என்று சத்தியமாக விளங்கவில்லை. போராடாமல் எல்லாமே "லட்டு" கணக்காக வாய்க்கு வந்து சேரும் நிலையிலா இன்றைய தமிழகம் இருக்கிறது?
தெளிவில்லாத பேச்சு
உண்மையில் மக்கள் பக்கம்தான் ரஜினி நிற்க வேண்டும். அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் மக்களுடன் மக்களாக இறங்கிப் போராட வேண்டும். அவர் மட்டுமல்ல கமல், ஸ்டாலின் உள்பட யாராக இருந்தாலும் சரி, மக்களோடு இறங்கி போராட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தூக்கி குப்பையில் போட்டு விடுவார்கள். முன்பு போல இல்லை தமிழக மக்கள்.
இதுக்குப் பேசாமல் இருக்கலாம்
உண்மையில் நடிகர் என்ற வெறும் பிரபலத்தை மட்டுமே நம்பி அரசியலுக்கு ரஜினி வருவது உறுதியாகியுள்ளது. அவரால் எதிலுமே தெளிவாக பேச முடியவில்லை. அவர் பேசும் எல்லாமே முரண்பாடாகத்தான் போகிறது. முன்பு ரஜினி எதிர்ப்பாளர்கள்தான் இதைச் சொன்னார்கள். எல்லோரும் இப்போது இதை சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
|
மைக் நீட்டினால் பேசாதீங்க
ரஜினியின் இன்றைய தூத்துக்குடி பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரஜினிகாந்த் சார், யாராவது உங்களது முகத்தை நோக்கி மைக்கை நீட்டினால் நீங்கள் பேசாமல் இருப்பது நல்லது. ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, மக்களின் மாபெரும் போராட்டத்தை இழிவுபடுத்தும் தைரியம் எப்படி வந்தது உங்களுக்கு? என்று கேட்டுள்ளார்.
போரில் வெல்வது சுலபமல்ல
ரஜினி மக்களிடமிருந்து கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.. இது சினிமா இல்லை.. பக்கம் பக்கமாக வசனம் பேசி விட்டு ஸ்டைலாக இதெப்படி இருக்கு என்று கேட்டு விட்டுப் போக.. போர்க்களம்.. இந்தப் போர்தான் நிஜம்.. இதில் வெல்வது அத்தனை சுலபமல்ல.. என்பதை ரஜினி புரிந்து கொண்டால் நல்லது.