ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.. ஆனால், மோடி தான் பிரதமர் ஆக வேண்டும்- ராம.கோபாலன்
சென்னை: ஜெயலலிதா உள்பட அனைவருக்காகவும் நான் பிராத்தனை செய்கிறேன். ஆனால் நரேந்திர மோடிதான் பிரதமராக வர வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் திட்டங்களைப் பாராட்டியுள்ள அதே சமயம், மோடிதான் பிரதமர் பதவிக்கு சரியானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டி...
எல்லோருக்கும் உயிர் பயம்
கேள்வி- பலத்த போலீஸ் பாதுப்புடன் இருக்கிறீர்களே... அந்தளவுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா?''
பதில்- எல்லாருக்குமே உயிர் பயம் இருக்கிறது. சாவு என்ற ஒன்று இருப்பதால்தான் உலகம் இன்னமும் இயங்குகிறது. இருக்கிறது. யாருமே சாக மாட்டார்கள் என்றால் பூமி தாங்காது. இதுதான் இயற்கை நியதி!
தீவிரவாதிகள் கைது குறித்து...
கேள்வி - சமீபத்தில், தீவிரவாதிகள் சிலரை காவல் துறை கைது செய்துள்ளது. அதற்காக அரசை பாராட்டுவீர்களா?'
பதில் - தீவிரவாதிகளைப் பிடித்ததற்கு பாராட்டுக்கள். ஆனால், காலம் கடந்து கைது செய்துள்ளார்கள். இவர்களை முன்பே பிடித்திருந்தால் விலைமதிப்பு இல்லாத உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். தீவிரவாதிகளைப் பிடிப்பதில் அரசியலும் கலந்திருக்கிறது.
ஓட்டுக்காக நடவடிக்கை
ஓட்டுக்காக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக நினைக்கிறேன். முஸ்லிம் ஓட்டுக்கள் போய்விடுமோ என்ற பயம் எல்லா அரசியல் கட்சிகளிடமும் இருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான திசையில்தான் காவல் துறை போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், அந்த இடத்துக்குப் போவதற்கு முன்னால் சில தடுமாற்றங்கள் வருமோ என்று நான் பயப்படுகிறேன்.
போலீஸாருக்குப் பரிசு கொடுத்தது குறித்து
கேள்வி - தீவிரவாதிகளைப் பிடித்த போலீஸ்காரர்களுக்கு தமிழக அரசு பரிசு கொடுத்ததை வரவேற்கிறீர்களா?
பதில் -இது ரொம்ப நல்ல விஷயம். வீரப்பனைப் பிடித்தபோதும் பரிசு அறிவித்தார்கள். இப்போதும் போலீஸார் உயிரைப் பயணம் வைத்து போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு மரியாதை, அங்கீகாரம். இது அவசியம்தான். இதனால், தீவிரவாதிகளைப் பிடித்த போலீஸாரின் பெயர் வெளியில் தெரிந்துவிட்டதே என்று சொல்வது தவறு. இதை எல்லாம் தெரிந்துதானே போலீஸ் வேலைக்கு அவர்கள் வருகிறார்கள். எனவே, பெயர் தெரிவது போலீஸுக்கு அச்சுறுத்தல் என்றால், அதைவிடக் கேவலம் எதுவும் இல்லை.
முஸ்லீம்கள் அத்தனை பேருமேவா குற்றவாளிகள்
கேள்வி - பொதுவாக உங்களைப் போன்றவர்கள் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகள் போல பேசுகிறீர்கள் என்கிறார்களே? ஆனால், பல முஸ்லிம் அமைப்புகள் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்?
பதில்- ஆமாம்! கோட்டை அமீர் என்ற ஒருவர் குரல் கொடுத்தார். ஆனால், அவருக்கே பயம் இருக்கிறது. கோவையில் என்னைச் சந்தித்த முஸ்லிம் பெரியவரிடம் கேட்டேன். 'நாங்கள் சொன்னா எங்க இளைஞர்கள் எங்க கேட்கிறாங்க?' என்று அவர் பதில் சொன்னார். மயிலாடுதுறையில் என்னை ஒருவர் சந்தித்தார். அவரும் என்னிடம் இந்த இளைஞர்கள் செய்வது தவறு என்றுதான் சொன்னார். 'இன்று மாலை ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் நீங்கள் வந்து இதைச் சொல்ல வேண்டும்' என்று அழைத்தேன். 'ஐயோ.. நான் சொல்ல மாட்டேன். சொன்னா என்னைக் கொன்னுடுவாங்க' என்று பயந்தார். இதுதான் யதார்த்தம்.
சமுதாயம் முடிவெடுக்க வேண்டும்
கொலை செய்பவர்களுக்கு, குண்டு வைப்பவர்களுக்கு தங்குவதற்கு இடம் தர மாட்டோம், அடைக்கலம் தர மாட்டோம் என்று அந்த சமுதாய மக்கள் முடிவெடுத்தால் மட்டுமே இந்தச் சம்பவங்களைத் தடுக்க முடியும்.''
மோடியை ஆதரிக்கிறீர்களா
கேள்வி- பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை ஆதரிக்கிறீர்களா?
பதில்- மோடி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பிரார்த்தனை செய்கிறேன். மோடி வந்திருந்த திருச்சி கூட்டத்துக்குப் போயிருந்தேன். தமிழகத்தில் மோடிக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. கிராமங்களில் இருந்தெல்லாம் நிறைய பேர் வந்திருந்தார்கள். இளைஞர்கள், மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவரால்தான் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.''
எனக்கு அரசியல் தெரியாது
கேள்வி- ஜெயலலிதாவும் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவர் ஜெயிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவில்லையா?
பதில்- எனக்கு அரசியல் பற்றி அவ்வளவாக தெரியாது. எல்லாரும் போட்டி போடட்டும். யார் தங்களது பலத்தை நிரூபிக்க முடியுமோ, யாருக்கு வலிமை இருக்கிறதோ அவர்கள் வெற்றிபெறட்டும். வறுமையும் வேலையின்மையும் ஒழிய வேண்டும். மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சி அமைய வேண்டும்.
அம்மா உணவகம் சிறப்பானது
'அம்மா உணவகம்' போன்ற திட்டங்கள் மிகவும் சிறப்பானது. புதுமையாக யோசிக்கிறார் ஜெயலலிதா. என்ன திட்டங்கள் கொண்டுவந்தால் மக்களுக்கு பயன் அளிக்கும் என்று யோசிக்கிறார். ஜெயலலிதாவுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். ஆனால், மோடிதான் பிரதமராகணும் என்றார் அவர்.