புனித ரமலான் நோன்பு தொடங்கியது - அரிசி அளித்த முதல்வருக்கு இஸ்லாமியர்கள் நன்றி
சென்னை: தமிழகத்தில் சிறப்புத் தொழுகையுடன் நேற்று ரமலான் நோன்பு தொடங்கியது. பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க, விலையில்லா அரிசி வழங்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இஸ்லாமியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், ரமலான் நோன்பு நேற்று சிறப்பு தொழுகையுடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க, விலையில்லா அரிசி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த அரிசியைப் பெற்று அதில் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டது.
ரமலான் மாதத்தில்
இஸ்லாமியப் பெருமக்கள் புனித ரமலான் மாதத்தில், இஸ்லாம் மதத்தின் ஐந்து கடமைகளில் முக்கியமான ஒன்றான நோன்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறை தெரிந்தது
தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு பிறை தோன்றியதை அடுத்து, நேற்று முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது என தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி ஹாஜி சலாவுதீன் ஐயூப் நேற்று தெரிவித்தார்.
திருவல்ரலிக்கேணி பெரிய பள்ளிவாசல்
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா பெரிய பள்ளிவாசலில், நேற்று அதிகாலை நடைபெற்ற ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையில், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு நோன்பில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதாவுக்கு நன்றி
இதில் திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த இஸ்லாமியர்கள், ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு அரிசி வழங்கி உத்தரவிட்ட முதல்வ ஜெயலலிதாவுக்கு, நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
திருச்சியில்
இதேபோல், திருச்சி மாவட்டத்தில் உள்ள நந்தர் அலி தர்கா மற்றும் அஸ்ரத் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் நள்ளிரவு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், ரமலான் நோன்பைத் தொடங்கினர். இதேபோல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையுடன் ரமலான் நோன்பைத் தொடங்கியுள்ளனர்.