புதிய ரூ.500, 2000 நோட்டுகளில் இந்தியை திணிப்பதா? ராமதாஸ் கண்டனம்
புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் இந்தி மொழியை திணித்திருக்கும் மத்திய அரசின் செயலுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்த பிரதமர் மோடி அதனை சரிகட்டுவதற்காக வெளியிட்டுள்ள புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களில் இந்தி திணிப்பை செய்வதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதாகக் கூறி ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த அறிவிப்பால் மக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றத்தையும், பரபரப்பையும் பயன்படுத்திக் கொண்டு புதிய ரூ. 2000, ரூ. 500 ரூபாய் நோட்டுக்களில் இந்தியை திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒருகட்டமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.2000, ரூ.500 நோட்டுக்களில் வழக்கமாக இடம்பெறும் பன்னாட்டு எண் வடிவத்துடன், கூடுதலாக தேவநாகரி வடிவத்திலும் 2000, 500 ஆகிய எண்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகள் வரை தேவநாகரி எண்களை பயன்படுத்தக் கூடாது; அதன்பிறகு அந்த எண்களை பயன்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், நினைவுக்குத் தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளில் அத்தகைய சட்டம் எதுவும் கொண்டு வரப்படாத நிலையில், ரூ.2000, ரூ.500 நோட்டுக்களில் தேவநாகரி எண்கள் அச்சிடப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகும்.
அதுமட்டுமின்றி, தூய்மை இந்தியா இலச்சினையை பதித்துள்ள மத்திய அரசு, அதில் 'தூய்மை இந்தியா தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி' என்ற முழக்கத்தை புதிய நோட்டுகளில் இந்தி மொழியில் மட்டும் இடம்பெறச் செய்திருக்கிறது.
ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது இந்திய ரிசர்வ் வங்கி தான் என்ற போதிலும், புதிய நோட்டுகளை பொறுத்தவரை மத்திய அரசின் ஆதிக்கமே ஓங்கி நிற்கிறது. தூய்மை இந்தியா நல்லத் திட்டம் தான் என்றாலும், அதனுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத ரூபாய் நோட்டுகளில் அதை இடம்பெறச் செய்திருப்பதே மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு சாட்சியாகும்.
இந்தி பேசாத மக்கள் மீது பல்வேறு வழிகளில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க முயன்று தோல்வியடைந்த மத்திய அரசு, இப்போது, ரூபாய் நோட்களின் மூலமாக இந்தியையும், தேவ நாகரி வடிவ எண்களையும் அறிமுகப்படுத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு, இதுபோன்ற மலிவான செயல்களில் ஈடுபடக் கூடாது.
இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலோ அல்லது உச்சநீதிமன்றமே தானாக முன்வந்து இப்பிரச்சனையை கையில் எடுத்தாலோ மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுவது நிச்சயம். பணத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில் இதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தால் ஏமாறப் போவது மத்திய அரசு தான் என்று ராமதாஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.