பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனத்தில் ஊழல்: ராமதாஸ் குற்றச்சாட்டு
பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அமைச்சரே நேரில் பேரம் பேசுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அமைச்சரே நேரில் பேரம் பேசும் அவலம் நடப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பெரியார் பல்கலைக்கழக பணி நியமனங்களை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, சரியான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டவுடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 14 ஆசிரியர் பணியிடங்களையும், அதன் உறுப்புக்கல்லூரிகளில் 24 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு முன்பே அப்பணியிட நியமனங்களுக்கான பேரம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் இரு பேராசிரியர்கள், மூன்று இணைப் பேராசிரியர்கள், 9 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 14 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அறிவிக்கைகள் பெறப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 21-ஆம் தேதி கடைசி நாளாகும்.
12 நாட்கள்தான் அவகாசம்
பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி ஒரு பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்க விடுமுறை நாட்களையும் சேர்த்து 12 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருகிறது.
6 நாட்கள் அவகாசம் போதாது
அதிலும் குறிப்பாக பல்கலைக்கழக பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் ஆகிய பணிகளுக்கான அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, ஒரு வார இடைவெளிக்கு பிறகு செவ்வாய்க்கிழமைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள், கடைசி நாள் ஆகிய இரு நாட்களையும் கழித்து விட்டுப் பார்த்தால் மீதமுள்ள 10 நாட்களில் 6 நாட்கள் மட்டும் தான் அரசு வேலை நாட்களாகும். இப்பணிக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனும்போது ஏதோ ஒரு மாநிலத்தில் குக்கிராமங்களில் வாழும் ஒருவர் இந்த அறிவிக்கையை படித்து விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் போதாது.
முன்கூட்டியே ஏற்பாடு
இதை வைத்துப் பார்க்கும் போது பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்ட சிலர் மட்டும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.இது 2ஜி அலைக்கற்றை ஒதுக்குவதற்கான நிபந்தனைகளை சிலருக்கு மட்டுமே பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டதை விட பெரிய மோசடியாக உள்ளது. தாங்கள் விரும்பியவர்களுக்கு வேலை வழங்கவே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
நேர்காணாலில் பேரம்
இவை ஒருபுறமிருக்க இந்த பணிகளுக்கு வெளிப்படையாகவே பேரம் பேசப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ள 14 பணியிடங்களுக்கு ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, இரு கட்டங்களாக நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது. நேர்காணலுக்கு வந்தவர்களிடம் பல்கலைக்கழக துணைவேந்தரின் தூதர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் பேசியிருக்கிறார்கள். அவ்வாறு தமது தூதர்கள் பேசுவார்கள் என்று நேர்காணலுக்கு வந்த சிலரிடம் துணைவேந்தரே கூறியிருக்கிறார்.
அமைச்சர் செயல்
பேராசிரியர் பணிக்கு ரூ.50 லட்சம், இணைப்பேராசிரியர் பணிக்கு ரூ.40 லட்சம், உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.35 லட்சம் தர வேண்டும் என்று துணை வேந்தர்களின் தூதர்கள் கூறியிருக்கின்றனர். மற்றொருபுறம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்த பலர் தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகனை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது துணைவேந்தரின் தூதர்கள் குறிப்பிட்ட அதேதொகையை கூறி, மேலிடத்திற்கு தர வேண்டியிருப்பதால், அதற்கும் குறைவாக வாங்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார்.
புதிதாக ஆள்தேர்வு
ஆனால், அமைச்சரும், துணைவேந்தர்களின் தூதர்களும் குறிப்பிட்ட தொகையைக் கையூட்டாகத் தர எவரும் தயாராக இல்லை என்பதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஆள்தேர்வு நடைமுறையை அப்படியே விட்டுவிட்டு, புதிதாக ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக குற்றஞ்சாற்றப்படுகிறது.
முதல்வர் பழனிச்சாமி தலையீடு
இப்போது பல்கலைக்கழகத்திற்கும், உறுப்புக்கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு பேரங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியில் உள்ள உறுப்புக்கல்லூரியில் உதவிபேராசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில், முதலமைச்சரே தலையிட்டு தமக்கு வேண்டியவர்களின் பட்டியலை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தகுதிகளின் அடிப்படையில்
பேராசிரியர்கள் அனைவரும் முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில் தேர்வு செய்தால் தான் அவர்களால் வழங்கப்படும் கல்வி தரமாக இருக்கும். ஆனால், உயர்கல்வி அமைச்சரும், பல்கலைக்கழக துணை வேந்தரும் போட்டிப்போட்டுக்கொண்டு தரகர்களை நியமித்து பேராசிரியர் பணிகளை ஏலம் போட்டு விற்பது மிகப்பெரிய அவலமாகும்.
கண்காணிப்பு அமைப்பு வேண்டும்
இந்த பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நியமன ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. எனவே, பெரியார் பல்கலைக்கழக பணி நியமனங்களை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, சரியான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டவுடன் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் மற்ற கல்லூரிகளில் நடந்த பணி நியமன ஊழல் பற்றியும் விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.