தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம்! பிரிட்ஜோ உடலை வாங்க மறுப்பு!!
இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக மீனவர்கள் இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று 4வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ பலியானார். அவரது மரணத்துக்கு நீதி கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர்கள் அல்லது வெளியுறவுத் துறை செயலர் நேரில் வந்து மீனவர்கள் மீதான தாக்குதல் இனி தொடராது என உறுதி அளித்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம்; பிரிட்ஜோவின் உடலை வாங்குவோம் என்பது மீனவர்கள் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவு மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
ஏற்கனவே மீனவர் படுகொலையை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வதை மீனவர்கள் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இன்று தங்கச்சி மடத்துக்கு நேரில் சென்று மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.