மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு பரோல் ஏற்பாடு: டிடிவி தினகரன்
மகாதேவன் இறுதி சடங்கில், சசிகலா பங்கேற்க விரும்பினால், அவர் பரோலில் வெளிவர தேவைப்படும் ஏற்பாடுகளை செய்துதர தயாராக உள்ளேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை: சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகன், மகாதேவன் (47) இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தஞ்சையில் வசித்து வந்தவர்.
இன்று, திருவிடைமருதூர் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக மகாதேவன் இன்று சென்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நிலைமை மோசமாக இருந்ததால், அவர் கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், கும்பகோணம் மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மகாதேவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சசிகலா குடும்பத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
மகாதேவனின் நற்பண்புகளால், சசிகலாவுக்கு அவர் மீது மிகுந்த பாசம் உண்டு. தனது அண்ணன் பிள்ளைகளில், மகாதேவன் சசிகலாவுக்கு செல்லமாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகாதேவனின் இறப்பு செய்தியை அறிந்ததும், சசிகலா மிகுந்த சோகமடைந்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கூறுகையில், மகாதேவன் மரணமடைந்த செய்தி, சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாதேவன் இறுதி சடங்கில், சசிகலா பங்கேற்க விரும்பினால், அவர் பரோலில் வெளிவர தேவைப்படும் ஏற்பாடுகளை செய்துதர தயாராக உள்ளேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.