அந்த 2 கன்டிஷனை ஏற்றுக்கொண்டால் தான் பேச்சுவார்த்தை: பொன்னையன்
சென்னை: சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஓபிஎஸ் அணியின் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சசி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இந்நிலையில் சசி அணி இரண்டாக உடைந்துள்ளது. டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தாரை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.
டிடிவி தினகரனுக்கு வெறும் 8 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு தான் உள்ளது. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிகளும் ஒன்றாக சேர பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். தெரிவித்ததையடுத்து ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ஓ.பி.எஸ். அணியில் உள்ள பொன்னையன் கூறுகையில்,
2012ம் ஆண்டில் ஜெயலலிதா எப்படி செய்தாரோ அதே போன்று சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்த 2 நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.