தண்ணீர் பஞ்சத்துக்கு “பை பை”- தொடர் மழையால் 80 சதவீதம் நிரம்பி வழியும் அணைகள், ஏரிகள்!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக திகழும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள், "இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது கணிசமாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக நேற்றைய நிலவரப்படி பூண்டி 12 மில்லிமீட்டர், சோழவரம் 30, செங்குன்றம் 44, செம்பரம்பாக்கம் 17 மற்றும் வீராணம் 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 3,096 கன அடியும், சோழவரம் ஏரிக்கு 238, புழல் 885, செம்பரம்பாக்கம் 500, வீராணம் 785 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் தட்டுப்பாடு கிடையாது:
மொத்த கொள்ளளவில் பூண்டி ஏரியில் 82.98 சதவீதமும், சோழவரம் 67.31 சதவீதமும், செங்குன்றம் 84.61 சதவீதமும், செம்பரம்பாக்கம் 85.76 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக 80 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக போதிய நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நடப்பாண்டுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. அதேபோல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
நீர்பிடிப்பு பகுதிகள்:
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், "தமிழக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் முக்கியமான 15 அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 4.2 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது.
பரம்பிக்குளம் மட்டும் கம்மி:
இதேபோல் பவானிசாகர் 52.6, அமராவதி 9, பெரியார் 16.8, வைகை 12, பாபநாசம் 70, மணிமுத்தாறு 30.5, பேச்சிப்பாறை 5, பெருஞ்சாணி 8.6, கிருஷ்ணகிரி 1.8, சாத்தனூர் 23.8, சோலையாறு 10, ஆழியாறு 1, திருமூர்த்தி 4 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. இதில் பரம்பிக்குளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் மழை அளவு பதிவாகவில்லை.
குடிநீர் வழங்கும் திட்டம்:
தொடர்ந்து மழை இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருப்பதால் அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கரைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் போதிய மழை இருப்பதால் 124.80 அடி கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 120.97 அடியும், 65 அடி உயரம் கொண்ட கபினி அணையில் 56.11 அடி நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று வரை 5 ஆயிரத்து 568 மில்லியன் கன அடி தண்ணீர் பெறப்பட்டு உள்ளது.
பூண்டிக்கு தண்ணீர் திறப்பு:
அதற்கு பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது மழை காரணமாக ஆரணி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் அதிலிருந்து சிறிய அளவு மழைநீர் கிருஷ்ணா நீர் கால்வாய் வழியாக பூண்டிக்கு வந்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.