சென்னை கலவரம்.. போலீஸ் தடியடி.. பிப். 8ல் விசாரணையை தொடங்குகிறது நீதிபதி ராஜேஷ்வரன் கமிஷன்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் முடிவில் வெடித்த கலவரம் குறித்த விசாரணை வரும் 8ம் தேதி தொடங்குகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் இந்த விசாரணையை மேற்கொள்ள இருக்கிறார்.
சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக பிப்ரவரி 8ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் விசாரணையை தொடங்க இருக்கிறார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது நடுகுப்பம் மீன் சந்தை மற்றும் குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை போலீசாரே கொளுத்தினார்கள்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இந்த வன்முறையில் வீட்டில் இருந்தவர்களை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்ததாகவும், வீடுகள் தாக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டினார்கள். இதுகுறித்து நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம், கடந்த 23ம் தேதி சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிக்கும். இந்த விசாரணை வரும் 8ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து வன்முறை குறித்து விசாரிக்க உள்ளார்.
அடுத்த வாரம் தொடங்கும் இந்த விசாரணை 3 மாதத்தில் முடிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.