ஆர்.கே. நகர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் நெல்லையில் அதிரடி கைதால் பரபரப்பு
நெல்லை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வெங்கடேஷ் நெல்லையில் திடீரென கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினமா செய்ததால் அங்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகேந்திரன் உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் தங்கம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஆர்.கே. நகர் தொகுதியில் டெலிபோன் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வி.கே.புரம் நகராட்சியில் 4 இளநிலை உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக நகராட்சி தலைவி, ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வெங்கடேஷ் கடந்த 13.4.2015 அன்று நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தார். ஒரு பணியிடத்திற்கு ரூ.10 லட்சம வரை பேரம் நடந்திருப்பதாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில் வி.கே.புரம் நகராட்சியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கலெக்டரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அவர் திடீரென உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து வெங்கடேஷை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சென்னை ஆர்.கே. நகர் கொகுதியில் போட்டியிடுகிறேன். மற்றபடி நான் அங்கு பிரச்சாரம் செய்ய செல்லவில்லை. மாலை வரை அவரை காவலில் வைத்திருந்த போலீசார் பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.