தொப்பிக்காரா தொப்பிக்காரா... காசு குடுக்கத்தானே வந்திருக்கே...! - ஆர்கே நகர் காமெடிகள்
இந்தப் படம் இன்றே கடைசி என்பதுபோல ஆர்கே நகர் தேர்தல் ரத்து என்ற செய்தி எந்த நேரத்திலும் வரலாம் என்ற நிலை வந்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக ஆர்கே நகரில் நடந்த சில சுவாரஸ்யங்கள் அப்படியே...
எங்கும் கரன்சி மயம்...
பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆர்கே நகர் பகுதி வணிகர்கள் எல்லோரும் இப்போது குஷியாக இருக்கிறார்கள். இடைதேர்தல் பட்டுவாடாவால் பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறது. தொகுதிக்குள் அதிக எண்ணிக்கையில் வெளியூர் ஆட்கள் தங்கியிருப்பதால் லாட்ஜ், ஹோட்டல் பிசினஸ் பட்டையை கிளப்புகிறது. ஹோட்டல்களில் எவ்வளவு சாப்பாடு செய்தாலும் லன்ச் 2.30 மணிக்குள்ளும் டின்னர் 8.30 மணிக்குள்ளும் முடிந்து விடுகிறது. இந்த ஒரு மாதத்தில் ஆர்கே நகரில் நடந்திருக்கும் டாஸ்மாக் வருவாயைக் கணக்கெடுத்தால் அது எங்கேயோ போகும். இத்தனைக்கும் தொகுதி முழுக்க பாண்டிச்சேரி சரக்கு வேறு ஓடுகிறது.
அய்யோ... அம்புட்டும் அவங்களுக்கு மட்டுமா?
ஆர்கே நகரின் தொகுதிக்குள்ளேயே ராயபுரம் தொகுதியை சேர்ந்த சில தெருக்கள் வருகின்றன. அந்த மக்கள் நிலை தான் ரொம்பவே பாவம். கண்ணுக்கெதிராகவே அருகில் இருக்கும் மக்கள் சொர்க்கத்தை அனுபவிக்க நம்மால் முடியவில்லையே என புழுங்கித் தவிக்கிறார்கள். அவர்களில் பலர் விரைவில் தங்களையும் ஆர்கே நகரோடு இணைக்க சொல்லி போராட்டம் நடத்தலாம். ஆர்கே நகரில் தான் ஆறு மாதத்துக்கு ஒருமுறை இடைதேர்தல் வருகிறதே...?
போட்றா ஆட்டய..!
வெளியூரிலிருந்து வந்திருக்கும் தினகரன் ஆட்கள் சுணங்கிப்போய் லாட்ஜ்களிலேயே முடங்கி விடுகின்றனர். எங்கே போனாலும் எதிர்ப்பு, கெட்ட வார்த்தைகளால் திட்டு வாங்குவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களே ஒருவருக்கொருவர் பார்க்கும்போது ‘கண்டிப்பா நமக்கு மூணாவது, நாலாவது இடம் தானோ என்று சொல்லிக்கொள்கிறார்கள். எனவே பட்டுவாடாவுக்கு என்று வழங்கப்படும் பணத்தை தங்களுக்காக ஒதுக்கி விடுகிறார்கள். அப்படி சரியாக பட்டுவாடா செய்யாத ஆட்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார் தினகரன். தேர்தல் வரைக்கும் தான் தினகரனுடன் பயணிப்போம். தேர்தலில் ஓபிஎஸ் வென்றாலோ இரண்டாம் இடம் வந்தாலோ போதும் கட்சி அவர் பக்கம் போய்விடும். நாங்களும் போய்விடுவோம் என்று ஓப்பனாகவே பேசி வருகிறார்கள்.
ஆனாலும் தினம் குறைந்தது ஒருவராவது பணம் கொடுக்கும்போது பிடிபட்டு விடுகிறார்கள். அப்படி பிடித்துக்கொடுப்பவர்களுக்கெல்லாம் ஸ்பெஷல் பதவி, பரிசு உண்டு என்று ஓபிஎஸ், திமுக மேலிடங்கள் சொல்லியிருப்பதால் இரு அணிகளில் இருக்கும் நிர்வாகிகளும் இதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
தொப்பிக்காரனை விடாதே.. துரத்தியடி!
இப்படி ஒரு மக்கள் எழுச்சியை சசிகலா அணி எதிர்பார்க்கவில்லை. தொப்பி போட்டு யார் வந்தாலும் துரத்தியடிக்கிறார்கள். முதல் மரியாதையில் வரும் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் கேரக்டர் கணக்காக எங்கே சென்றாலும் மக்கள் ஜெயலலிதா மரணத்தை பற்றியே கேட்டு துரத்தியடிக்கிறார்கள். சிஆர். சரஸ்வதி பாசுதேவ் மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு காய்கறி வாங்கிக்கொண்டிருந்த பெண்கள் ‘நீங்க தானே எங்கம்மா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப இட்லி துன்னாங்க... பொங்கல் துன்னாங்க...ன்னு புரூடா விட்டது?' என்று கேட்டு தக்காளிகளை வீசியிருக்கிறார்கள். தக்காளிக்கு அசராத சரஸ்வதி ‘நீங்கள்லாம் யாரு அனுப்புன ஆட்கள்னு தெரியும். இந்த தக்காளிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' என்று சவால் விட்டிருக்கிறார். சவாலுக்கு பரிசாக அடுத்த சில நிமிடங்களில் செருப்பு வந்திருக்கிறது. உடனே கிளம்பி விட்டார்.
மற்ற தொகுதியில் இருந்து வந்து தேர்தல் பணி செய்யும் நிர்வாகிகள். மக்கள் எதிர்ப்பு காரணமாக தினகரனுக்கு எதிராக மட்டும் வேலை பார்ப்பது போல நடிக்கும் நிர்வாகிகள் தினகரன் அந்த பக்கம் போனதும் ஓபி அடிக்கிறார்கள்.
தொப்பிக்காரா... பணம் கொடுக்கவா வந்த?
கொரியர், மளிகைக்கடை, வீட்டு ஜன்னல்களில் பணத்துடன் தொப்பியை வீசுவது, இரவு பவர்கட் செய்து வினியோகம் என்று பல விதமாக நடக்கிறது பட்டுவாடா. இதனால் தொப்பி போட்டு யார் வந்தாலும் அவர்களிடம் பணம் கேட்டு மொய்க்கிறார்கள் மக்கள். சும்மாவே ஓபிஎஸ் அணியும், திமுக அணியும் பட்டுவாடாவுக்கு ஆட்கள் வருகிறார்கள் என்று கிளப்பிவிட்டு எங்களை மாட்டிவிடுகிறது என்று புலம்புகிறார்கள் தினகரன் ஆட்கள்.
கங்கை அமரனுக்கு கூட்டம்...
கங்கை அமரன் எங்கு சென்றாலும் கூட்டம் கூடுகிறது. காரணம் அவரது பேச்சு. அந்தந்த பகுதி மக்களை கவரும் வண்ணம் பாய்ண்ட்களை எடுத்து வீசுகிறார். தெலுங்கு வருடப்பிறப்பு அன்று தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் கொருக்குப்பெட்டை பகுதிக்கு சென்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தெலுங்கில் வாக்கு கேட்டார்.
மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தரை மேல் பிறக்க வைத்தான் பாடலை ரீமிக்ஸ் செய்து ஓட்டு கேட்கிறார். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ‘இதுவரைக்கும் நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்களோ அவங்க ஒண்ணும் செய்யலைனு தெரியும். எல்லாமே செல்லாத ஓட்டாகிப் போச்சு. எனக்கு ஓட்டு போட்டா உங்க பிரச்னையெல்லாம் தீர்த்து வைப்பேன். இங்கேயே வீடு எடுத்து தங்கிட்டேன். இனி உங்கள்ல ஒருத்தன் நான்' என்று செண்டிமெண்டாக பேசி ஓட்டு கேட்கிறார்.
இன்னொரு இடத்தில் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாடல் வரிகளில் ஜெயலலிதா மரண மர்மம், தலைவன் மோடி என்றெல்லாம் ரீமிக்ஸ் செய்து பாடுகிறார். ஆனால் ஓட்டு விழ வேண்டுமே?