
ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றம் - பிரவீண் நாயர் நியமனம்
சென்னை: ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்த பத்மஜா தேவி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரவீண் நாயரை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக பத்மஜா தேவி செயல்பட்டதாக திமுக அளித்த புகாரின் பேரிலேயே தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

தேர்தல் ஆணையரிடம் புகார்
திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் நேற்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியை சந்தித்து 3 கோரிக்கை மனுக்கள் தந்தனர். அந்த மனுவில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஏற்கனவே ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டார்.

பத்மஜா தேவி நியமனம்
தற்போது இந்த தொகுதியில் சசிகலா தலைமையிலான அதிமுக அணி சார்பில் டி.டி.வி. தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பிரச்னை தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை இணை இயக்குனர் பத்மஜா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுங்கட்சி அத்துமீறல்
பத்மஜா தேவி ஏற்கனவே கடந்த 2016ல் நடந்த பொது தேர்தலில் இதே தொகுதி தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர். தற்போதும் இவர் நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. தேர்தலின் போது கூறப்பட்ட ஆளும் கட்சியினர் அத்துமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்பதற்காக இவர் மீது புகார்கள் கூறப்பட்டன.

பணப்பட்டுவாடா
வாக்காளர்களுக்கான பணப் பட்டுவாடா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. எனவே நியாயமாக முறையாக தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே பத்மஜாவை தேர்தல் அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவித்து விட்டு அவருக்கு பதிலாக மத்திய அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

ஜார்ஜ் மீது புகார்
இதே போல ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் திமுக எம்பிக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பத்மஜா தேவி மாற்றம்
ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியின் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவியை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக பிரவீண் நாயரை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திமுகவினர் அளித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது ஆளும்கட்சித்தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.