பட்டப்பகலில் செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன?
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு வந்த ரவுடியை மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கொலை செய்யப்பட்ட ரவுடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பயத்தால் சென்னையில் வசித்த ரவுடி
செங்கல்பட்டு முருகேசனார் தெருவை சேர்ந்த மோகன் என்பவரது மகன் விக்னேஷ். இவர் மீது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல், வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் ரவுடியாக வலம் வந்த விக்னேசுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரவுடியாக வலம் வந்த இவருக்கு அங்கிருந்தவர்கள் நெருக்கடி தந்ததால் தற்காலிகமாக சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்
இதற்கிடையே தன் மீதான வழக்கு ஒன்றின் விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வந்தார் விக்னேஷ். செங்கல்பட்டில் மாமியார் வீடு இருப்பதால் மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஒழலூர் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார் விக்னேஷ். இந்நிலையில் நேற்று இரவு ஒரு செல்போன் அழைப்பு விக்னேசுக்கு வந்தது. அந்த அழைப்பில் வீட்டை விட்டு வெளியில் வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ரவுடி வெட்டிக் கொலை
இதனை அடுத்து வீட்டை விட்டு வெளியில் வந்த விக்னேஷை அங்கு காத்திருநத மர்மக் கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் விக்னேஷ். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். பின்னர் அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நடந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரவுடி யார் என்பதில் போட்டி
படுகொலை செய்யப்பட்ட விக்னேசுக்கும் அன்வர் என்பவருக்கும் யார் ரவுடி என்பதில் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்வரின் ஆட்கள் விக்னேஷை தீர்த்து கட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வழக்கமாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களிடமும் அன்வர் ஆட்களிடமும் விசாரிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications