வர்தா புயல் பாதிப்புக்கு உடனடியாக ரூ. 1000 கோடி தேவை - பிரதமரிடம் கேட்ட ஓபிஎஸ்
வர்தா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உடனடியாக 1000 கோடி தேவை என்று பிரதமரிடம் கேட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். 184 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்தார். வர்தா புயல் நிவாரண நிதியை உடனே வழங்கவும் பிரதமர் மோடியிடம் முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன இவற்றை எல்லாம் புனரமைக்க வேண்டும்.
புயல் நிவாரணமாக ரூ.22,573 கோடி அளிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். முதற்கட்டமாக உடனடியாக ரூபாய் 1000 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.
காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.