அதெல்லாம் எங்க ஆட்சியில் "சிஸ்டம்" எல்லாம் சரியாதான் இருக்கு.. ரஜினிக்கு தம்பிதுரை பதிலடி
தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சிஸ்டம் எல்லாம் சரியாகத்தான் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பதிலடிக் கொடுத்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் திருமண மண்டபத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். கடந்த 5 நாள்களாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர் கடைசி நாளான நேற்று பேசியது அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. ஜனநாயகம் இல்லை. திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றெல்லாம் ரஜினி கூறினார்.
ஆட்டம் கண்டுள்ள அதிமுக
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இரு அணிகளாக பிரிவு ஏற்பட்டது. மேலும் தமிழகத்தில் அரசு செயலற்று கிடப்பதாக பல்வேறு கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தங்களது உள்கட்சி பிரச்சினையிலேயே முதல்வரும், அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் நாட்டம் செலுத்துகின்றனரே தவிர மக்கள் பணிகளில் அல்ல என்றும் தெரிவிக்கின்றனர்.
தம்பிதுரை பேட்டி
சென்னை விமான நிலையத்தில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், டெல்லியில் நடைபெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது தமிழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் உரிமைகள் குறித்தும் விரிவாக பேசினேன்.
அரசை இயக்குவது மக்கள்தான்
தமிழக அரசை மத்திய அரசு இயக்க வேண்டும் என்றால் நேரடியாகவே இயக்குவோம். மறைமுகமாக இயக்க வேண்டியது இல்லை என மோடி கூறி உள்ளார். இந்த அரசை இயக்குவது தமிழக மக்கள்தான். வேறு யாரும் கிடையாது. ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.
அரசியலுக்கு வரலாம்
ரஜினி அரசியலுக்கு வரும் மனநிலையில் உள்ளார். ஜனநாயக நாட்டில் மக்களுக்கு சேவை செய்வதற்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் அவர் பேசியபோது நாட்டில் சிஸ்டமே சரி இல்லை என்றார்.
சிஸ்டம் நல்லா இருக்கு
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆசை. அணிகள் இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளும், பிளவும் இருப்பது சகஜம் தான். அவற்றை எல்லாம் மறந்து இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எங்களது ஆசையாக உள்ளது என்றார் அவர்.