நடுவானில் தீப்பிடித்து எரிந்த செல்போன்.. சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் பீதி
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்திற்குள் செல்போன் தீப்பிடித்து புகை வெளியேறியதால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை நோக்கி இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. சென்னையை நெருங்கியபோது பயணிகள் இருக்கையின் மேல்பகுதியில் திடீரென புகை வந்துள்ளது. இதுபற்றி விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர் வந்து சோதனை செய்தபோது ஒரு பயணியின் கைப்பையில் இருந்த சாம்சங் கேலக்ஸி நோட் 2 மொபைலில் இருந்து லேசான புகை வருவது கண்டறியப்பட்டது. இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. உடனே இதுபற்றி விமானிக்கு தெரியவந்ததும், அவர் விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு நிலைமையை விளக்கினார்.
அதேசமயம், உடனடியாக அந்த மொபைல் அப்புறப்படுத்தப்பட்டு தண்ணீரில் அமிழ்த்தி செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பயணிகள் சாம்சங் நோட் 2 செல்போனை எடுத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அல்லது விமானத்திற்குள் சுவிட்ச்டு ஆஃப் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளோம். இருந்தும் இந்த சம்பவம் நடந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.