சங்கரராமன் கொலை- கூட்டுச் சதிக்கான ஆதாரம் இல்லாததால் அனைவரும் விடுதலை: தீர்ப்பில் நீதிபதி
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் இன்று புதுவை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மொத்தம் 25 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இவர்களில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆகிவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கதிரவன் படுகொலை செய்யப்பட்டார்.
இதையொட்டி 23 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி முருகன் தமது தீர்ப்பில், சங்கராச்சாரியார்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை. அத்துடன் சங்கரராமன் குடும்பத்தினரே கொலையாளிகளை அடையாளம் காட்டவும் தவறி பிறழ் சாட்சியாகிவிட்டனர்.
மேலும் அரசு முன்வைத்த சாட்சிகளில் 83 பேர் அரசுத் தரப்புக்கு ஒத்துழைப்பு தராமல் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளைக் கூட அரசு தரப்பு அடையாளம் காட்டவில்லை. வழக்கின் அதிகாரி சக்திவேல் சுதந்திரமாக விசாரணை நடத்தவில்லை. கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் அனைத்து பொருட்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
இதனாலே அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று அறிவித்தார்.