நான் புதுவை நீதிபதியுடன் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது-ஜெயேந்திரர்
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர். அவர் மட்டுமல்லாமல் விஜயேந்திரர் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 5ம் தேதி நடக்கவிருந்தது. இந்த நிலையில் சுந்தரராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயேந்திரரும், நீதிபதி ராமசாமியும் தொலைபேசியில் பேசிக் கொண்ட விவரம் ஆடியோ மூலமாக வெளியாகியுள்ளது. அதில் பண பேரம் நடந்துள்ளதாக தெரிகிறது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து நேற்று நீதிபதி சுகுணா, சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
ஏற்கனவே பல அரசுத் தரப்பு சாட்சிகள் பல்டி அடித்து விட்டதால் இந்த வழக்கு பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தது.இந்த நிலையில் ஜெயேந்திரரும், நீதிபதியும் போனில் பேசியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஜெயேந்திரர் மறுத்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த ஆடியோ பொய்யானது. சங்கரராமன் வழக்குக்குப் பின்னர் நாங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவே கிடையாது. மேலும் நான் நீதிபதி ராமசாமியை ஒரே ஒருமுறைதான் பார்த்துள்ளேன். என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காக எனக்கு வேண்டாதவர்கள் செய்துள்ள சதிச் செயல் இது என்று அவர் கூறினார்.