"நல்லா டிவி பார்ப்பேன்.. ஆனா டெய்லி படிப்பேன்" - இது விஷ்ணுப்பிரியாவின் வெற்றி ரகசியம்
கோவை: சமஸ்கிருதத்தை முதன்மை பாடமாக படித்து மாநில அளவில் ஈரோடு, திருச்சியை சேர்ந்த 2 மாணவிகள் முதல் இடம் பிடித்துள்ளனர். ஈரோடைச் சேர்ந்த மற்ற 2 பேர் 2வது, 3வது இடங்களை பிடித்துள்ளனர்.
ஈரோடு பாரதிய வித்யாபவன் பள்ளி மாணவி விஷ்ணுப்பிரியா முதல் இடம் பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள்: சமஸ்கிருதம் 199, ஆங்கிலம் 194, இயற்பியல் 200, வேதியியல் 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் 200, கணிதம் 200. அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள்: 1193 ஆகும்.
இந்த வெற்றி பற்றி விஷ்ணுப்பிரியா கூறுகையில், "தினமும் மாலையில் 2 மணி நேரமும், காலையில் 3 மணி நேரமும் மட்டும் படிப்பேன். டியூஷன் எதுவும் செல்லவில்லை. படிக்கும் பாடங்களை தினமும் எழுதி பார்த்து அதில் சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெறுவேன். தினமும் டி.வி. பார்ப்பதும், புத்தகம் வாசிப் பதும் என்னுடைய பொழுது போக்கு. கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகுவதே என்னுடைய லட்சியம்‘‘ என்றார்.
திருச்சி சாவித்ரி வித்யாசாலா பள்ளி மாணவி ஆனந்தியும் 1193 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள்: சமஸ்கிருதம் 199, ஆங்கிலம் 194, பொருளியல் 200, வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 200. அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள்: 1,193 ஆகும்.
மாணவி ஆனந்தி கூறுகையில், "மாநில அளவில் முதலிடம் பெற்றிருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. வரும் காலத்தில் ஐசிடபிள்யுஏ படித்து ஆடிட்டிங் துறையில் சாதனை படைத்து தேர்ச்சி பெற வேண்டும் என்பதே விருப்பம்" என்றார்.