இலங்கை தூதரகம் சென்னையில் இருக்கவே கூடாது.. சரத்குமார் ஆவேசம்
தென்காசி: தமிழக மீனவர்களுக்காக அயராது குரல் கொடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளனர். அப்படிப்பட்ட நாட்டின் துணைத் தூதரகம் சென்னையில் உள்ளது. அது தமிழகத்தில் இருக்கவே கூடாது. உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
தென்காசி அருகே குறும்பலாப்பேரியில் இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. அதில் சரத்குமார் கலந்து கொண்டு 3409 பேருக்கு வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் சரத்குமார் பேசியதாவது:
தொலைநோக்குடன் செயல்படும் ஜெ.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்கள் அனைவரும் குறிப்பாக கிராமப்புற மக்கள் படித்து முன்னேற வேண்டும் என்று அனைத்து விஞ்ஞான அறிவும் பெற மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி வழங்கி தொலைநோக்குடன் செயல்பட்டு வருகிறார்.
மகத்தான சாதனை
கடந்த சட்டசபைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி மகத்தான சாதனை படைத்து வருகிறார் தமிழக முதல்வர். அவரது கடின உழைப்பால் தமிழகம் முன்னணி மாநிலமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
மேலும் நிதி பெற முயற்சிப்பேன்
இங்கு உள்ள பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் 10 லட்சம் ரூபாய் நிதி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் தேவைப்படும் நிதி மற்ற துறைகளின் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் ஜெ.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி இந்திய பிரதமர் நநேந்திர மோடிக்கு தமிழக மீனவர்களை காக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கடிதங்கள் மூலமாகவும் நேரிலும் வலியுறுத்தி வருகிறார்.
அவதூறாக சித்தரித்த இலங்கை இணையதளம்
அப்படி நடவடிக்கை எடுத்து வரும் தமிழக முதல்வரை இலங்கை அரசின் ராணுவ தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவதூறாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருக்கவே கூடாது
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்த இலங்கை அரசின் தூதரகம் இனி தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. இந்திய அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சரத்குமார்.