ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.. இன்னும் பயிற்சி வேண்டுமோ.. சசிகலா புஷ்பாவின் சங்கடம்
சென்னை: திமுகவினரை தாக்கி பேசினால் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைத்து சசிகலா செய்யப்போன விஷயம் அவருக்கே எதிரானதாக முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
திமுகவின், திருச்சி சிவாவை, ஏர்போர்ட்டில் வைத்து தாக்கிய, அதிமுக எம்.பியாக இருந்த, சசிகலா புஷ்பாவை மறுநாளே போயஸ் கார்டனுக்கு வர வைத்து, முதல்வர் அட்வைஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன்பிறகு ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தன்னை அடித்ததாக கண்ணீர் விட்டு கதறினார். இதையடுத்து உடனடியாக அவர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பூமராங்
திமுகவினரை தாக்கி பேசினாலோ, தாக்கினாலோ அதிமுகவில் முக்கிய பதவி கிடைக்கும் என்ற கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்து சசிகலா புஷ்பா காய்நகர்த்தப்போய் அது ரிவர்ஸ்சாகி பூமராங் போல அவரையே தாக்கிவிட்டதாக கூறப்படுகிது.
சிதம்பரம் மீது தாக்கு
1991-96 காலகட்டங்களில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்தார். அந்த சூழ்நிலைியல் ஒருநாள், திருச்சி விமான நிலையத்தில் வைத்து, சிதம்பரத்தை, அப்போதைய பால் வள தலைவரான இளவரசன் தாக்க முயன்றார்.
இளவரசனுக்கு வளர்ச்சி
இந்த சம்பவத்திற்கு பிறகு, ஏனோ தெரியவில்லை, இளவரசன் அரசியல் வாழ்க்கையில் வளர்ச்சிதான். இளவரசனுக்கு எம்.பி., பதவி, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, மாநில பேரவை செயலர் பதவி, அரியலுார் மாவட்டச் செயலர் பதவி என, வரிசையாக தேடி வந்தன
கருணாநிதி மீது விமர்சனம்
பெரம்பலுார் எம்.பி.யாக இருந்த ராஜரத்தினம், 1998ல், சென்னையில் நடந்த ரயில்வே விழாவில் பங்கேற்றபோது, அதே விழாவில் பங்கேற்றிருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியை, நேருக்கு நேர் விமர்சித்து பரபரப்பை கிளப்பினார். அதன்பின், அவருக்கு கட்சியில் ஜெ., பேரவை மாநில செயலர், எம்.எல்.ஏ. என பதவிகள் தேடி வந்தன.
புவனேஸ்வரிக்கு மேயர் பதவி
கடந்த, 2006 - 11ல், முதல்வராக இருந்த கருணாநிதிக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகம் செய்து, கைதாகிய புவனேஸ்வரியை, நெல்லை மேயராக்கியதோடு, மாவட்ட மகளிர் அணியிலும் பொறுப்பு கொடுத்தார் ஜெயலலிதா.
எஸ்.எஸ்.சந்திரனுக்கும்
கருணாநிதியை கண்டபடி விமர்சனம் செய்து பெயர் வாங்கிய, மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரனுக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்பட்டது. நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு மகளிர் அணியில் பொறுப்பு, சமூக நலவாரிய பொறுப்பு, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, செய்தி தொடர்பாளர் என கட்சியிலும், ஆட்சியிலும், வரிசையாக பொறுப்புகள் அளிக்கப்பட்டன.
பலிக்காத தந்திரம்
இதையெல்லாம் பார்த்த சசிகலா புஷ்பா, சமீபகாலமாக தனக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் தராமல் புறக்கணிக்கப்பட்டு வருவதை உணர்ந்து, திருச்சி சிவாவை பகடைக்காயாய் பயன்படுத்தி, உயர் பதவி பெற திட்டமிட்டதாக கூறுகிறார்கள் ர.ரக்கள். ஆனால், ஜெயலலிதாவின் நிலைப்பாடு சமீபகாலமாக மாறியுள்ளதாகவும், இனிமேலும், வேலை பார்க்காமல், பிற கட்சிகளை திட்டிக்கொண்டே பதவி பெற முடியாது என்றும் ர.ரக்கள் பூரிப்போடு கூறுகிறார்களாம்.