ஆர்கே நகர் தேர்தல் ரத்து- அடங்கியது தினகரன் ஆட்டம்- நிம்மதி பெருமூச்சில் சசிகலா உறவினர்கள்!
ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் சசிகலாவின் உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனராம்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதில் சசிகலா உறவினர்கள்தான் ரொம்பவே மகிழ்ச்சியில் உள்ளனராம்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றிவிடுவதில் சசிகலாவின் உறவினர்கள் ஆளாளுக்குப் போட்டி போட்டனர். ஒருகட்டத்தில் கோட்டை உங்களுடையது; டெல்லி செங்கோட்டையது உங்களுடையது என பங்கெல்லாம் பிரித்து பேரானந்தப்பட்டனர்.
ஆனால் சசிகலாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் கொந்தளித்தே போயினர். இதனால் சசிகலா கோஷ்டி அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
சிறையில் சசி
முதல் கட்டமாக சசிகலா அதிமுகவை கைப்பற்றினார். பின்னர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட பேராசைப்பட்டார். ஆனால் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில் சசிகலாஜெயிலுக்குத்தான் போக நேரிட்டது.
ஆட்டம் போடும் தினகரன்
சிறைக்குப் போன சசிகலா தினகரனை துணைப் பொதுச்செயலராக்கினார். ஆனால் தினகரனோ சசிகலா என்ற பெயரையே மறக்கும் அளவுக்கு ஆர்கே நகரில் ஓரம்கட்டி தாமே அதிமுக என துள்ளி வருகிறார். சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் ஓரம்கட்டி தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார்.
அதிர்ந்த உறவுகள்
இதனால் சசிகலாவையே கட்சியைவிட்டு தினகரன் நீக்கினாலும் ஆச்சரியம் இல்லை என அச்சப்பட்டனர் அவரது உறவினர்கள். ஆர்கே நகரில் பணத்தை வாரியிறைத்து முதல்வர் நாற்காலியில் தினகரன் அமர்ந்துவிடுவாரோ என அதிர்ந்து போயிருந்தனர் சசிகலா உறவுகள்.
தேர்தல் ரத்தால் மகிழ்ச்சி
தற்போது ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. இதனால் சசிகலாவின் உறவினர்கள் குறிப்பாக திவாகரன் வீட்டில் ஏக மகிழ்ச்சியாம்.