எதையுமே கேட்காத கர்நாடகா.. இதை மட்டுமா கேட்டு விடப் போகிறது.. பி.ஆர். பாண்டியன் #cauvery
சென்னை: காவிரியில் விநாடிக்கு 2000 கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆறுதல் தருகிறதே ஒழிய, அதனால் எந்தப் பலனும் கிடைக்காது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளர்.
இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பி.ஆர். பாண்டியன் கருத்து தெரிவிக்கும்போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமே அளிக்கிறது. விநாடிக்கு 2000 கன அடி நீர் என்பது போதுமானதல்ல. இதைக் கொண்டு சாகுபடியைத் தொடங்க முடியாது. ஏற்கனவே காவிரிப் பாசனப் பகுதிகள் அழிந்து போய் விட்டன. பாலைவனமாக மாறி விட்டன.
ரயில்களை மறித்தும், கைப்பற்றியும் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளோம். அந்த அளவுக்கு நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். அதன் எதிரொலிதான் இது. இது எங்களது பாதிப்பின் எதிரொலியே தவிர அரசுகளுக்கு எதிரானதல்ல. நெய்வேலியிலும் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளோம். போராட்டக்களத்தில் நிற்கும் விவசாயிகளுக்கு இந்த உத்தரவு ஆறுதல் தருகிறதே தவிர பலன் தராது.
கர்நாடகம் யார் என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை அந்த மாநில அரசே மீறி செயல்படுகிறது. அதற்கு மத்திய அரசு துணை போகிறது. கர்நாடகத்திற்கு ஆதரவாக மத்திய அமைச்சர்களே கருத்து தெரிவிக்கிறார்கள். தமிழகத்தை வாழ விடாதே என்று வெளிப்படையாக சொல்கின்றனர். சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழகமும் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அந்த அளவுக்கு மத்திய அரசும், கர்நாடகமும் இரு மாநில உறவுகளை சீர்கெடுக்கும் வகையிலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானதாகவும் செயல்படுகின்றன. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஆறுதல் தருகிறது. ஆனால் விவசாயிகளை இது பாதுகாக்காது.
இந்த உத்தரவு எந்த வகையிலும் சம்பா சாகுபடிக்கு உதவாது. நாம் பருவ காலத்தைத் தாண்டி விட்டோம். ஒரு போக சம்பா சாகுபடியை ஆகஸ்ட் 15க்குள் தொடங்கியிருக்க வேண்டும். 20ம் தேதி பருவ மழை தொடங்க வேண்டும். அப்போது ஒரு அடிக்கு மேல் பயிர் வளர்ந்திருந்தால் அதைக் காக்க முடியும். ஆனால் நட்ட விதைகளைக் கூட காப்பாற்ற முடியாத நிலையில்தான் உள்ளோம்.அதற்குக் கூட தண்ணீர் இல்லை. விதை முளைக்கவே தண்ணீர் இல்லை. பாலைவனமாக காட்சி தருகிறது என்றார் பி.ஆர். பாண்டியன்.