இதுதாங்க.. தினகரன் தரப்பு கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் மேட்டர்.. "ஐடியா" தந்த சாமி யாரோ??
2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை பலமாக கருதுகிறது தினகரன் தரப்பு.
சென்னை: முதல்வர் எடப்பாடியாருக்கான ஆதரவு வாபஸ் மற்றும் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் 2011-ம் ஆண்டு கர்நாடகா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை முன்வைத்துதான் தினகரன் தரப்பு தெம்பாக வலம் வருகிறது.
கர்நாடகாவில் 2010-ம் ஆண்டு பாஜகவின் எதியூரப்பா முதல்வராக இருந்தார். அப்போது 11 பாஜக எம்.எல்.ஏக்கள், 5 சுயேட்சைகள் எதியூரப்பா மீது அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து ஆளுநராக இருந்த பரத்வாஜ் எதியூரப்பாவை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக சபாநாயகராக இருந்த போபையா 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள், 5 சுயேட்சை எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் வழக்கு
அப்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
எதியூரப்பா வெற்றி
இதனைத் தொடர்ந்து எதியூரப்பாவை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநராக இருந்த பரத்வாஜ் உத்தரவிட்டார். அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என 5 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் முன்வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். அப்போது நடந்த வாக்கெடுப்பிலும் எதியூரப்பா அரசு வென்றதாக அறிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
பின்னர் கர்நாடகா உயர்நீதிமன்றம், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியாக வழங்கிய தீர்ப்பைத்தான் இப்போது தினகரன் தரப்பு கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது.
இதுதான் காரணம்
அந்த தீர்ப்பில், எதியூரப்பா மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்த ஒரு காரணத்துக்காகவே அவர்கள் மீது சபாநாயகர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், எதியூரப்பா மீது அதிருப்தி தெரிவித்திருக்கும் எம்.எல்.ஏக்கள் தாங்கள் பாஜகவில்தான் தொடருவதாக மட்டுமின்றி, எதியூரப்பா அல்லாத ஒருவர் தலைமையில் அமையும் பாஜக அரசுக்கு ஆதரவு தருவதாகவும் கூறியுள்ளனர் என சுட்டிக்காட்டி எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பளித்தனர்.
தினகரன் தரப்பு வாதம்
இதைத்தான் கெட்டியாகப் பிடித்து கொண்டு ஆளுநரிடம் கொடுத்த மனுவில், தாங்கள் அதிமுகவிலேயே தொடருகிறோம்; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது மட்டும் நம்பிக்கை இல்லை; அவருக்கான ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என தெளிவாக சுட்டிக்காட்டினர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள். தற்போதும், சட்டசபை கூடுவதற்கு முன்பாக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யவே முடியாது. இது கர்நாடகா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது; நீதிமன்ற அவமதிப்பு என வாதிடுகிறது தினகரன் தரப்பு.
அங்கிட்டு ஒரு கணக்குப்பிள்ளை!
இங்கிட்டு ஒரு சட்டாம்பிள்ளை!