12 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு ஸ்கேனர்... ஆதார் எண் பிழையை தவிர்க்க ஏற்பாடு
சென்னை: ரேஷன் கடைகளில் ஆதார் எண்களை பெறுவதற்கு ஸ்கேனிங் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2005-2009 என்று அச்சடிக்கப்பட்ட ரேஷன் கார்டுகள் தான் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தற்போது வரை வைத்திருக்கின்றனர். 2009-ம் ஆண்டு முதல் உள்தாள் ஒட்டும் பணியே நடைபெற்று வருகிறது.
இதனிடையே, குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகளை வழங்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தற்போது ஆதார் எண் பெறப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கும், ஆதார் எண்களை பிழையில்லாமல் பெறுவதற்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 12,000 நியாய விலைக் கடைகளில் ஸ்கேனர்கள் மூலமாக ஆதார் எண்களை பெறும் பணி தொடங்கியுள்ளது.
இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் அளிக்கும் ஆதார் எண்களை பிழையில்லாமல் பதிவு செய்ய முடியும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.