‘பூ மழை தூவி... பருவமழையைக்கு வரவேற்பு’: கூடலூர் மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கூடலூர்: கூடலூரில் மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பருவமழையை மலர் தூவி மாணவர்கள் வரவேற்ற நிகழ்ச்சி அம்மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் நடத்தப்பட்டது.
கூடலூர் பகுதியில் ஆண்டு தோறும் ஜூன் முதல்வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி விடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு எதிர்பார்த்தது போல் சரிவர பருவமழை பெய்யவில்லை.
பருவமழை தாமதமானதற்குக் காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடே என்பதை மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் கூடலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும், பருவமழையை மாணவர்கள் மலர் தூவி வரவேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியரும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான ராபர்ட் தலைமை தாங்கினார். கூடலூர் நகரசபை தவைலர் ரமா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசி பருவ மழையை வரவேற்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மாணவ - மாணவிகள் புறப்பட்டு கூடலூர் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். அப்போது பருவமழையை வரவேற்கும் வகையில் மலர்களை தூவி சென்றனர்.
அனைத்து மாணவ- மாணவிகளும் கைகளில் குடைகளை பிடித்தவாறு சென்றனர். பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக சென்ற மாணவ- மாணவிகளின் ஊர்வலம் இறுதியாக கூடலூர் ஆர்.டி.ஒ. அலுவலகத்தை வந்தடைந்தது.
உறுதிமொழி:
பின்னர் சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்போம். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கூறி பள்ளி மாணவ- மாணவிகள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் மைய நிர்வாகி சிவதாஸ், போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் அருண், ராஜா மணி, ஏசுமரியான், கவுன்சிலர் தாமஸ், வாசுதேவன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.